கொரியன் சில்லி கார்லிக் பொட்டேட்டோ செய்முறை
இன்றைய காலத்தில் இளம் தலைமுறைக்கும் கொரியர்களின் அழகும், அவர்களின் வாழ்க்கையும், அவர்கள் சாப்பிடக்கூடிய உணவு வகைகளும் மிகவும் விருப்பத்திற்குரியதாகவே திகழ்கிறது. அப்படி அவர்கள் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களில் மிகவும் பிரபலமானதாக திகழ்வது தான் சில்லி கார்லிக் பொட்டேட்டோ. இதை கடைக்கு சென்று வாங்கி சாப்பிடாமல் வீட்டிலேயே எப்படி எளிமையான முறையில் தயார் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 3
சோள மாவு – ஒரு கப்,
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
பூண்டு – 10 பல்
மிளகாய் விதைகள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்
கடுகு எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
ஸ்ப்ரிங் ஆனியன் – ஒரு கட்டு
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு நன்றாக வேக வேண்டும். உருளைக்கிழங்கு நன்றாக வெந்த பிறகு இதை எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு ஆறிய பிறகு இதில் சோள மாவு, மிளகுத்தூள், உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். இது சப்பாத்தி மாவு பதத்திற்கு வரவேண்டும். அந்த அளவிற்கு நன்றாக மசித்து பிணைந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது கையில் எண்ணையை தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மசால் வடை தட்டுவோம் அல்லவா? அப்படி தட்ட வேண்டும். பிறகு அதற்கு நடுவே பாட்டில் மூடியை லேசாக அமுக்கி எடுத்தோம் என்றால் கொரியன் பொட்டேட்டோ தயாராகிவிடும். இப்பொழுது அடுப்பில் தண்ணீரை வைத்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்ததும் நாம் தயார் செய்து வைத்திருந்த உருளைக்கிழங்கு அனைத்தையும் ஒவ்வொன்றாக கொதிக்கும் தண்ணீரில் போட்டு பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும். இந்த சமயத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஐஸ் தண்ணீரை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு வெந்ததும் அதை அப்படியே அரி கரண்டியால் எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு ஐந்து நிமிடம் வைத்து விட வேண்டும். பிறகு அதை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் அந்த சில்லி மசாலாவை தயார் செய்து கொள்வோம். இதற்கு பூண்டை தோலுரித்து பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் மிளகாய் விதை, மிளகாய்தூள், சோயா சாஸ், வெள்ளை எள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் நன்றாக சூடு செய்த கடுகு எண்ணெயை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தாளையும் சேர்த்து நாம் வேக வைத்திருந்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் கொரியன் சில்லி கார்லிக் பொட்டேட்டோ தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: கேரளா கலத்தப்பம் ரெசிபி
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த கொரியன் வகையான உணவுப் பொருளை நாமே வீட்டில் செய்து கொடுப்பதன் மூலம் அவர்கள் விரும்பி சாப்பிடுவதோடு உங்கள் சமையலுக்கும் அடிமையாகி விடுவார்கள்.
The post கொரியன் சில்லி கார்லிக் பொட்டேட்டோ செய்முறை appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

