மருத்துவ செலவுக்கு ரூ.13 லட்சம் கடன் வாங்கியவரிடம் கந்து வட்டி வசூலித்து, தாக்குதல் - பெண் கைது!

சென்னை அமைந்தகரை, சான்றோர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராஜலட்சுமி (37). இவரின் தம்பி சதீஷ்குமார். கடந்த 2023-ம் ஆண்டு விபத்து ஒன்றில் சதீஷ்குமார் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ்குமாருக்கு பல லட்சம் ரூபாய் வரை செலவானது. அதனால் அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் வசித்து வரும் லதா என்பவரிடம் தம்பியின் மருத்துவ செலவுக்காக ராஜலட்சுமி 13 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடனாக வாங்கினார். அதற்கு மாதந்தோறும் 78,000 ரூபாயை ராஜலட்சுமி வட்டியாக கொடுத்து வந்தார். கடந்த சில மாதங்களாக வட்டி பணத்தை ராஜலட்சுமி சரிவர கொடுக்கவில்லை என தெகிரிறது. அதனால் லதாவும் அவரின் மகள் ஸ்ரீவித்யாவும் ராஜலட்சுமியின் வீட்டுக்கு வந்து வட்டி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும் 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறி கட்டாயப்படுத்தி ராஜலட்சுமியிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

கைது

அதைத் தொடர்ந்து கடந்த 12.3.2025-ம் தேதி ராஜலட்சுமியின் வீட்டுக்கு சென்ற லதா, அவரின் மகள் ஸ்ரீவித்யா, தகாத வார்த்தைகளால் பேசி கைகளால் ராஜலட்சுமி குடும்பத்தினரை கைகளால் தாக்கியிருக்கிறார்கள். மேலும் அசல், வட்டி பணத்துக்காக ராஜலட்சுமியின் சொந்த வீட்டை எழுதித் தரும்படி இருவரும் மிரட்டியிருக்கிறார்கள். இதையடுத்து ராஜலட்சுமி, அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் அதிக வட்டி கேட்டு மிரட்டல், தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து லதாவிடம் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு லதாவை (58) போலீஸார் கைது செய்தனர். கைதான லதா மீது கொலை உட்பட இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கில் லதாவின் மகள் ஸ்ரீவித்யாவை போலீஸார் தேடிவருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.