திண்டுக்கல்: மாந்தோப்பில் சுற்றித்திரிந்த குரங்கை சுட்டுக் கொன்று சாப்பிட்ட இருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வீர சின்னம்பட்டியில் மாந்தோப்பில் தொல்லை செய்த குரங்கை பணம் கொடுத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல கூறிய தோட்டத்துக்காரர், அதை கொன்று வீட்டிற்கு எடுத்து வந்து சமைத்து சாப்பிட்ட தொழிலாளி உள்பட இருவரை சிறுமலை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் வனத்துறையினரிடம் விசாரித்தோம். "திண்டுக்கல் வீர சின்னம்பட்டியைச் சேர்ந்தவர் கேட்டரிங் மாஸ்டர் ராஜாராம் 33. இவருக்கு சொந்தமாக வீர சின்னம்பட்டியில் மாந்தோப்பு உள்ளது. இதில் சில தினங்களாக குரங்குகள் புகுந்து மாங்காய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. குரங்குகளை விரட்ட பல்வேறு முயற்சிகளை செய்தும் பயனில்லாததால் ராஜாராம் விரக்தியடைந்துள்ளார்.

குரங்கு

இதனால் ராஜாராம், தவசிமடை வடுகப்பட்டியைச் சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி ஜெயமணியை (31), சந்தித்து குரங்குகளின் தொந்தரவு குறித்து கூறியிருக்கிறார். மேலும் அவருக்கு ஆயிரம் ரூபாயை கொடுத்து தன் தோட்டத்தில் உள்ள குரங்குகளை கொல்ல வேண்டும் என டீல் பேசியுள்ளார். இதையடுத்து ஜெயமணி, நேற்று முன்தினம் தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் வீர சின்னம்பட்டியில் உள்ள ராஜாராமுக்கு சொந்தமான மாந்தோப்பிற்குச் சென்று அங்கு சுற்றித்திரிந்த குரங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

கைதானவர்கள்

பிறகு உயிரிழந்த குரங்கை வீட்டிற்கு எடுத்துச் சென்று தோலை உரித்து கறியை சமைத்து சாப்பிட்டார். தோலை ஜெயமணி தவசிமடையில் புதைத்துள்ளார். இதை அறிந்த சிறுமலை ரேஞ்சர் மதிவாணன், வானவர் அப்துல் ரகுமான் தலைமையிலான வனத்துறை டீம் வடுகபட்டி பகுதியில் உள்ள ஜெயணியை பிடித்து விசாரித்தோம். விசாரணையில் ராஜாராம், பணம் கொடுத்து ஜெயமணியிடம் குரங்குகளை கொல்ல கூறியது தெரிந்தது. வனத்துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த குரங்கு தோல், நாட்டு துப்பாக்கி, வெடி மருந்தை பறிமுதல் செய்தோம்" என்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.