வீட்டினுள் மனைவிக்கு ஏசியுடன் சமாதி; மறைவுக்குப் பிறகும் காதலை வெளிப்படுத்து அன்பான கணவர்!

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த துறையூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் தனது இறந்த மனைவி மீது கொண்ட பேரன்பின் காரணமாக வீட்டினுள் மனைவிக்குச் சமாதி அமைத்து அங்கு வாழ்ந்து வருகிறார்.

கான்கிரட் தொழிலாளரான பழனி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது அத்தை மகள் செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு உடல்நிலை குறைவால் அவரது மனைவி இறந்துவிட்டார். மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல், வீட்டின் உள்ளே இறந்த மனைவிக்கென ஒரு இடம் ஒதுக்கி சமாதி எழுப்பி அதைப் படுக்கையறை போல் வடிவமைத்துள்ளார் பழனி.

அவரது மனைவிக்கு வீடு குளுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பாராம். அதனால் அவருக்கென ஏசியும் போட்டுள்ளார். வீட்டிற்கு யார் வந்தாலும் ஹாலில் நின்று பேச வேண்டும் என்று பழனி கூறுவாராம். அப்போதுதான் மற்றவர்கள் பேசும் சத்தம் அவரது மனைவிக்குக் கேட்கும் என்பதால் இவ்வாறு செய்யச் சொல்வாராம்.

"கடந்த 30 ஆண்டுகளாக எனக்காக உறுதுணையாக நின்றவர் என் மனைவி, யார் வீட்டிற்கு வந்தாலும் முதலில் உணவு அளித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அவருக்கு ஆன்மீகத்தின் மீது அதிக நாட்டம். தான் கோபமாக இருந்தால் கூட பொறுமையாக எடுத்துக் கூறி எனக்குப் புரியவைப்பார்" என்று பழனி உணர்ச்சிப் பொங்கக் கூறியிருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.