உயர்கல்வித் துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஆளுநர்தான் - அமைச்சர் கோ.வி.செழியன் தாக்கு

ஈரோட்டில் உள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன், "பெரியார் தொடங்கிய சிக்கய்ய நாயக்கர் கல்லூரியைத் தொடர்ந்து நடத்துவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக அந்தக் கல்லூரி தமிழக அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் பெரிய அளவிலான நூலகம், விளையாட்டு அரங்கம் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பெரியார் மண்ணுக்குக் கிடைத்த கெளரவமாகும். விரைவில் இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இத்திட்டம் தொடங்கப்படும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதை முதல்வரும், உயர்கல்வித் துறையும் கண்காணித்து வருகிறோம். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வித் துறையின் வளர்ச்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டையாக உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்.

யூஜிசி வரைவு விதிகளை எதிர்த்து சட்டப்பேரவையில் முதன் முதலில் தீர்மானம் கொண்டு வந்தது திமுக அரசுதான். இதன் தொடர்ச்சியாகவே, ஆந்திரம், கேரளா, தெலுங்கானா அரசுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உயர்கல்வி மட்டுமல்ல மாநிலத்தின் உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிற எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் போராடி வருகிறார்.

அமைச்சர் கோவி. செழியன்

இந்தியாவில் ஆளுநருக்கான பணியை நெறிமுறைப்படுத்துமாறு வழக்குத் தொடுத்துள்ளது திமுக அரசுதான். கெளரவ விரிவுரையாளர்கள் 2,600 பேரை நியமித்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறோம். கல்லூரிகளில் போதிய அளவு பேராசிரியர்கள் இல்லை. அதை நிவர்த்தி செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் செட் தேர்வு நடத்தப்பட்டு, மார்ச் மாத்தில் 1000 பேர் கெளரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஜூன் மாதத்தில் 4,000 நிரந்தரப் பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இத்தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழகத்துக்கெல்லாம் பாடமாக உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் ஈரோட்டில் பல்கலைக்கழகம் அமைக்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.