Sharath Kamal: `சென்னையில் தொடங்கி சென்னையிலேயே முடிக்கிறேன் - 5 ஒலிம்பிக்ஸ் ஆடிய சரத் கமல் ஓய்வு
இந்திய டேபிள் டென்னிஸின் முகமாக திகழும் தமிழக வீரர் சரத் கமல் சர்வதேச டேபிள் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
சரத் கமலுக்கு 43 வயதாகிறது. 2004 ஏதேன்ஸ் ஒலிம்பிக்ஸ் தொடங்கி பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வரைக்கும் 5 ஒலிம்பிக்ஸ்களில் கலந்துகொண்டிருக்கிறார். ஒரு ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டு ஒலிம்பியன் என்கிற பட்டத்தை வாங்குவதே பலருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கிறது. அப்படியிருக்க 5 ஒலிம்பிக்ஸ்களில் கலந்துகொள்வதெல்லாம் அசாதாரண விஷயம். உலகம் முழுவதுமிருந்து வெகு சில வீரர் வீராங்கனைகளே இந்த சாதனையை செய்திருக்கின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்ஸின் போதே சரத் கமலின் ஓய்வு பற்றி பேசப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து கடுமையாக முயன்று உடற்தகுதியை மேம்படுத்திக் கொண்டு பாரிஸ் ஒலிம்பிக்ஸூக்கும் வந்து சேர்ந்தார். பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் தேசியக் கொடியை கையில் பிடித்து இந்திய குழுவின் அணிவகுப்பை வழி நடத்தி சென்றிருந்தார்.
காமென்வெல்த் போட்டிகளில் மட்டும் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் வென்றிருக்கிறார். ஆசிய போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப், தேசிய அளவிலான போட்டிகள் என பலவற்றிலும் அடுத்தடுத்து பதக்கங்களை வென்றிருக்கிறார். மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதை வென்றிருக்கிறார்.

இந்நிலையில், வரவிருக்கும் WTT World Contender தொடருடன் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், என்னுடைய முதல் சர்வதேசப் போட்டியை சென்னையில்தான் ஆடினேன். என்னுடைய கடைசிப் போட்டியையும் சென்னையிலேயே ஆட விரும்புகிறேன். காமன்வெல்த், ஆசிய போட்டி மெடல்களை வென்றிருக்கிறேன். ஒலிம்பிக் மெடலை வென்றதில்லை. ஆனால், வருங்கால தலைமுறைக்கு பயிற்றுவித்து அவர்களின் மூலம் என் கனவை நிறைவேற்றிக் கொள்வேன். என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


