NIT : இந்தியாவை காப்பாற்றிய கோட்சே என புகழ்ந்த பேராசிரியருக்கு டீன் பதவி - கொதிக்கும் காங்கிரஸ்

இந்தியாவை காப்பாற்றிய கோட்சேவிற்கு நன்றி என்ற ஃபேஸ்புக் பதிவிட்ட பேராசிரியர், தற்போது கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் டீனாக நியமிக்கப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த ஆண்டு மகாத்மா காந்தியின் நினைவு தினம் அன்று, "இந்தியாவை காப்பாற்றிய கோட்சேவிற்கு நன்றி. ஹிந்து மகாசபா ஆர்வலர் நாதுராம் கோட்சே இந்தியாவில் உள்ள பலரின் ஹீரோ" என்று இப்போது கோழிக்கோடு என்.ஐ.டியின் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் துறையில் பேராசிரியராக பணிப்புரியும் முனைவர் ஏ.ஷைஜா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவிற்கு எதிர்ப்புகள் கிளம்ப, பதிவை நீக்கினார். ஆனாலும், அந்தப் பதிவின் ஸ்கிரீன்ஷாட் அதிகம் பகிரப்பட்டது. அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கும் பதிவானது. அதுக்குறித்து அப்போது ஷைஜா விளக்கமளிக்கையில், "என்னுடைய பதிவு காந்திஜியை கொன்றதை ஊக்குவிப்பது அல்ல. நான் கோட்சேவின் நான் ஏன் காந்தியை கொன்றேன் என்ற புத்தகத்தை படித்தேன்.

நாதுராம் கோட்சே, காந்தி

கோட்சேவும் விடுதலை போராட்ட வீரர் தான். அந்தப் புத்தகத்தில் சாதாரண மனிதனுக்கு தெரியாத பல தகவல்கள் மற்றும் உண்மைகள் உள்ளன. அதுக்குறித்து தான் அந்த பேஸ்புக் பதிவிட்டிருந்தேன். ஆனால், அதை மக்கள் தவறாக பரப்பும்போது, அந்தப் பதிவை நீக்கிவிட்டேன்" என்று கூறியிருந்தார்.

தற்போது ஷைஜா கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் டீனாக நியமிக்கப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த நியமனத்தை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்று காங்கிரஸார் அறிவித்துள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.