Jos Buttler: `இந்தியாவுக்கு சாதகமாக..! - துபாயில் மட்டுமே விளையாடுவதால் இங்கிலாந்து அதிருப்தி
ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி.
இந்த நிலையில், இந்திய அணிக்கு சாதகமாக அவர்கள் விளையாடும் எல்லா போட்டியும் துபாயில் மட்டுமே நடைபெறும் போக்கை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்தினாலும் இந்தியா, பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்தியாவுக்கான போட்டிகளை துபாயில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்திய அணி ஒரே ஸ்டேடியத்தில் விளையாடும் நேரத்தில் மற்ற அணிகள் பாகிஸ்தானின் 3 நகரங்களுக்கும் துபாய்க்கும் பயணிக்க வேண்டியுள்ளது.
Jos Buttler பேசியதென்ன?
இந்தியாவுக்கு சாதகமான இந்த நிலைமை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் ஜாஸ் பட்லர். எனினும் இது அவரை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
"ஏற்கெனவே இதுமிகவும் தனித்துவமான போட்டியாகிவிட்டதாக நினைக்கிறேன். தொடர் இங்கு நடக்கிறது, ஒரு நாடு மட்டும் வேறொரு நாட்டில் விளையாடுகிறது... நான் அதுகுறித்து பெரியதாக கவலைகொள்ளவில்லை. நான் இப்போது நாளைக்கான போட்டிக்கு தயார்படுத்திக்கொள்வதில் கவனமாக இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
பட்லரின் கருத்தைத் தொடர்ந்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள், மைக் அதர்டன் மற்றும் நாசர் ஹுசைன் இந்தியா மற்ற அணிகளைப்போல பயணம் செய்யாமல் துபாயின் ஒரே சூழலில் விளையாடுவது குறித்து பேசியுள்ளனர்.
இந்தியா அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றாலும் போட்டி துபாயில்தான் நடைபெறும் என்பது அவர்கள் மட்டுமே அனுபவிக்கும் சலுகை எனக் கூறியுள்ளனர்.

முன்னாள் கேப்டன்கள் பேசியதென்ன?
"இந்தியா துபாயில் மட்டுமே விளையாடுவதில் உள்ள நன்மைகளை அளவிட முடியாது. அவர்களுக்கு சலுகைகள் இருப்பதை மறுக்க முடியாது" என மைக் அதர்டன் கூறியுள்ளார்.
"இந்தியா துபாயின் சூழல்களில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதுமானது. அவர்கள் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியை எங்கு விளையாடப்போகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். இது மிகப் பெரிய சலுகை" எனப் பேசியுள்ளார் நாசர் ஹுசைன்.
மேலும், "அவர்கள் பயணம் செய்ய தேவையில்லை, ஒரே ஹோட்டல், ஒரே அறை, ஒரே பிட்ச், அதற்கு ஏற்றவாறு அவர்கள் வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள முடியும்" என்றும் நாசர் குறிப்பிட்டுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
