மாட்டு வண்டியில் வந்த எடப்பாடி; ஆப்சன்ட் ஆன செங்கோட்டையன் - அவிநாசி அத்திக்கடவு விழா துளிகள்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான, "அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றியதற்கு  முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அவிநாசி அத்திக்கடவு திட்டம் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியில் பாராட்டு விழா நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி

இதில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன் விழா மேடைக்கு மாட்டு வண்டியில் வருகை புரிந்தார். அவருக்கு விவசாயிகள் சார்பில் சீர்வரிசையும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "இது எனக்கு கிடைத்த பாராட்டு அல்ல. விவசாயிகளுக்கு கிடைத்த பாராட்டாக கருதுகிறேன். எவ்வளவோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியிருக்கிறேன். இன்று தான் நான் மன நிறைவுடன் பேசுகிறேன். அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்ட போது மத்திய அரசு அல்லது வங்கிகளிடம் நிதி பெற்று செய்யலாம் என்றனர்.

எடப்பாடி பழனிசாமி

ஆனால், எப்போது பணி முடியும் என்பதை கூற முடியவில்லை. எனவே உரிய நேரத்தில் திட்டத்தை முடிக்க, நான் மாநில அரசின் நிதியிலேயே திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டேன். பணிகளை வேகமாக முடிக்க ஒப்பந்தம் எல்.என்டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

சுமார் 85% பணிகள் முடிந்து 15% பணிகள் மட்டுமே மீதமிருந்தது. நிலம் கையகப்படுத்துவதில் சிரமங்கள் இருந்தன. அதை ஒரு ஓராண்டுக்குள் முடித்திருக்கலாம். அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே திமுக அரசு இத்திட்டத்தை கிடப்பில் போட்டது. நான்கு ஆண்டுகளாக காலம் தாழ்த்தி தற்போது தான் திறந்து வைத்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி

மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். அப்போது விடுபட்ட குளம் குட்டைகளை இணைத்து இரண்டாம் திட்டம் செயல்படுத்தப்படும். அதிமுக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. திமுக அரசு எதுவும் செய்யாமல் அதிமுக கொண்டு வந்த திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது." என்றார்.

இது அவிநாசி அத்திக்கடவு திட்டத்துக்காக போராடிய விவசாயிகள் ஒருங்கிணைத்த நிகழ்ச்சி என்பதால் நிகழ்ச்சி வளாகத்தில் அதிமுக கொடி உள்ளிட்டவை இடம்பெறவில்லை.  முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.சி கருப்பணன், பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், எம்எஸ்எம் ஆனந்தன், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காலியான சேர்கள்

ஆனால் செங்கோட்டையன் மட்டும் கலந்துகொள்ளவில்லை. எடப்பாடி பழனிச்சாமி பேச தொடங்கிய சிறிது நேரத்தில் கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அவர் காலி சேர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தவர்களை பார்த்து பேசினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.