உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம்: லிவ்இன், திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு... விதிமுறைகள் இதுதான்!
நாட்டில் கோவாவில் மட்டும் பொதுசிவில் சட்டம் அமலில் இருந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்திலும் இன்று முதல் பொதுசிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த ஆண்டே உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பா.ஜ.க அரசு பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த தீர்மானத்தை நிறைவேற்றியது. 2022-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறி பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தபோதிலும் அதனை அமல்படுத்தாமல் அரசு இழுத்தடித்து வந்தது. தற்போது இன்று முதல் அமலுக்கு வந்துள்ள பொது சிவில் சட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருக்கிறது.
இதன் படி லிவ் இன் உறவில் வாழ்பவர்கள் அதனை அரசிடம் முறைப்படி பதிவு செய்யவேண்டும். 21 வயதுக்கு உள்பட்டவர்கள் லிவ் இன் உறவில் வாழ்ந்தால் அவர்கள் தங்களது பெற்றோரிடம் இதற்கு ஒப்புதல் பெறவேண்டும்.
லிவ் இன் உறவை பதிவு செய்யாமல் இருந்தாலோ அல்லது தவறான தகவலை கொடுத்தாலோ அவர்களுக்கு 3 மாதம் சிறை அல்லது 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும். லிவ் இன் உறவில் வாழ ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள் அதனை பதிவு செய்யவேண்டும். அதோடு பதிவு செய்ய தாமதம் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதம் சிறை விதிக்கப்படும். திருமணம் செய்து கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் 21 வயது பூர்த்தியாகி இருக்கவேண்டும். அதோடு அனைத்து வகையான திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்யவேண்டும். அனைவரும் கல்வி கற்ற பிறகு திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் திருமணத்திற்கு 21 வயது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பலதார மணம், குழந்தை திருமணம், முத்தலாக் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் பொதுவான விவாகரத்து நடைமுறை அமல்படுத்தப்படும்.
பழங்குடியின மக்களுக்கு பொதுசிவில் சட்டம் பொருந்தாது. சமூகங்களிடையே சமத்துவத்தை உறுதி செய்வதை இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
லிவ் இன் உறவு மூலம் பிறக்கும் குழந்தைகளை "தம்பதியின் சட்டப்பூர்வமான குழந்தையாக பொதுசிவில் அங்கீகரித்துள்ளது. அதோடு அவர்களுக்கு பரம்பரைச் சொத்தில் சம உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்கிறது. பாலின வேறுபாடுகளை தவிர்க்கும் நோக்கில் ஆண், பெண் இருவரையும் குழந்தை என்று குறிப்பிடுவார்கள் என்று பொது சிவில் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம், விவாகரத்து, சொத்து, தத்தெடுப்பு போன்ற விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். 740 பக்க பொது சிவில் சட்ட சரத்து கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி முதல்வர் புஷ்கர் சிங் முன்பு தாக்கல் செய்யப்பட்டு அதற்கு அதே மாதம் 3-ம் தேதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை தொாடர்ந்து அதே மாதம் 6-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு மார்ச் 11-ம் தேதி அம்மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். கோவாவில் 1967-ம் ஆண்டில் இருந்தே பொது சிவில் சட்டம் அமலில் இருந்து வருகிறது.
ஆனால் பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வ்ருவோம் என்று பேச ஆரம்பித்த பிறகு நாட்டிலேயே உத்தரகாண்டில்தான் முதல் முறையாக பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது. இதனை தொடர்ந்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


