Yuga Bharathi : குடல்கறி சாப்பிட்டுக்கொண்டே காதலிக்கும்..! - மஹா பிடாரி நூல் வெளியீட்டு விழா

காதல் என்றாலே கஃபே, கடல், உயர்தர ஹோட்டல், திரையரங்கு என பெரும்பாலும் இவைகளை வைத்தே எழுதப்படும். ஆனால் யுகபாரதி சாராய நெடியும், மாமிச வாடையும் என எளிய மனிதர்கள் வாழ்வுடன் ஊடாடும் காதலைப் பற்றியான கவிதைகளை தொகுத்து "மஹா பிடாரி" என்ற நூலை எழுதியிருக்கிறார்.

விகடன் குழுமம் மற்றும் ராமாபுரம் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய இந்த நூலின் வெளியீட்டு விழா நேற்று சென்னை ராமபுரத்திலுள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் நடைபெற்றது.

யுக பாரதி

நூல் ஆசிரியரான கவிஞர் யுகபாரதி, நடிகர் சசிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மா.செ ஜி.செல்வா, ஊடகவியலாளர் கார்த்திகைச்செல்வன், அனைத்திந்திய மாணவப் பெருமன்றத்தின் மார்க்சியா, இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, தியாகராஜன் குமாரராஜா, ராஜூமுருகன், ஊடகவியலாளர் ஐயன் கார்த்திகேயன், இசை & ஸ்டாண்ட் அப் காமெடி கலைஞர் அலெக்சாண்டர் பாபு, ஹரிசரண் மற்றும் தொகுப்பாளர் டோஷிபா என பல்வேறு துறைகளை சார்ந்த ஆளுமைகள் பங்கேற்று இந்த நூல் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.

எஸ்ஆர்எம் கல்லூரியின் ஊடகத்துறை தலைவர் டாக்டர் பிரபாகரன் வரவேற்புரை ஆற்றி தொடக்கி வைத்த இந்நிகழ்வு காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது.

`என்ன எதுக்குயா அழைச்சிங்க ?’

இவ்விழாவில் பேசிய நடிகர் சசிக்குமார், ``யுக பாரதியிடம் ஆரம்பத்தில் இருந்து கேட்பது ஒரே கேள்வி தான்.... என்னை எதுக்குயா இந்த விழாவுக்கு அழைச்சிங்க? நான் புத்தகம் வாசிப்பேன். ஆனால் இந்த மாதிரி புத்தக விழாவுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.

நடிகர் சசிக்குமார்

நான் வந்ததுக்கு காரணம் என் முதல் படத்தில் காதல் சிலுவையில் பாடல் எழுதியுள்ளார். மதுர குலுங்க பாடல் போன்ற பல பாடல்கள் அவர் தான் எழுதினார். மஹா பிடாரி போல காதல் பிசாசே என அவர் வைக்கும் பெயரே நன்றாக இருக்கும்.

பாடலாசிரியர்களுக்கு துணையாக இருப்பது கவிதை புத்தகங்கள் தான். கவிதைகளும் நாவலும் தான் ஒரு படைப்பாளரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் விஷயமாக இருக்கிறது. மாணவர்கள் நீங்கள் எல்லோரும் இந்த கவிதைகளை வாசிக்க வேண்டும்" என பேசியவர் தனக்கும்‌ கவிஞர் யுகபாரதிக்குமான திரை அனுபவத்தை பகிர்ந்தார். 

`வசதியற்றவர்களுக்கும் காதல் இருக்கிறது’

இவ்விழாவில் பேசிய ஊடகவியலாளர் ஐயன் கார்த்திகேயன் "இந்த புத்தகத்தில் ஒரு லவ் யூ இல்லை, ஒரு ஈசிஆர் ரைடு இல்லை, காஃபி ஷாப் இல்லை, கார் இல்லை, காருக்குள் ஒரு முத்தம் இல்லை. ஆனால் இது ஒரு காதல் புத்தகம்.

தீண்டாமை ஒழிந்து விட்டதாக சொல்கிறார்கள் ஆனால் இன்னும் ஒழியவே இல்லை. காதல் கவிதைகளிலேயும் ஒரு தீண்டாமை உள்ளது. நாம் எல்லோரும் ஒரு எலைட் காதலை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஐயன் கார்த்திக்கேயன்

வசதியற்றவர்களுக்கும் காதல் இருக்கிறது. குடல்கறி சாப்பிட்டுக்கொண்டே காதலிக்கும் எளிய‌ மக்களின் காதலை அங்கீகரித்து இந்த கவிதைகளை யுகபாரதி எழுதியுள்ளார்.

ஆக்சுவல்லா காதல் என்பது என்னன்னா...போடாங்க என்ற கவிதை எனக்கு பிடித்திருந்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம் ஒரே காதல், ஒரு காதல் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற மனநிலை.

இந்த மனநிலைக்கு மாற்றான கருத்தும் ஆணவக்கொலையை பற்றிய கருத்தும் கொண்ட கவிதைகள் பல இதில் உண்டு. முதல் கவிதையே ஒரு கருத்தையும் கேள்வியையும் கொண்டு தான் புத்தகத்தை தொடக்கியிருக்கிறார்" என அவர் பேசினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.