தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய ராட்சத மரக்கட்டை... சுங்கத்துறையினர் விசாரணை..!

தமிழக கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு போதை பொருள்கள், மருந்து பொருள்கள் போன்றவை கடத்தி செல்லப்படுவது வழக்கமாக உள்ளது. இதே போல் பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவிற்கு தங்க கட்டிகள் கடத்தி வருவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் இலங்கை கடற்பரப்பில் சந்தேகப்படும் வகையில் சென்று கொண்டிருந்த மீன்பிடி படகினை இலங்கை கடற்படையினர் சோதனையிட்டனர்.

இலங்கையில் பிடிபட்ட கஞ்சா பார்சல்கள்

இந்த சோதனையின் போது அந்த நவீன மீன்பிடி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 400 கிலோ கஞ்சா சிக்கியது. படகினுள் 185 பார்சல்களாக கட்டப்பட்டிருந்த இந்த கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.120 மில்லியன் என தெரிகிறது. இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த கஞ்சா பறிமுதல் தொடர்பாக இலங்கை வடக்கு கொழும்பில் உள்ள ஹென்டலா என்ற பகுதியைச் சேர்ந்த 31 வயது உடைய நபர் ஒருவரை இலங்கை போலீஸார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு தனுஷ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் ராட்சத மரக்கட்டை ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக, புலனாய்வு பிரிவு மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் அந்த மரக்கட்டையை ஆய்வு செய்த போது அது சுமார் 74 அடி நீளமும், 6 அடி விட்டமும் கொண்ட அளவில் இருந்துள்ளது. மேலும், அந்த மரக் கட்டை பதாக் எனப்படும் மர வகையினை சேர்ந்தது எனவும் தெரிய வந்தது.

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய ராட்சத மரம்

இதனை தொடர்ந்து தனுஷ்கோடி வடக்கு கடற்கரைக்குச் சென்ற சுங்கத்துறையினர், அந்த மரத்தினை ஆய்வு செய்தனர். கரை ஒதுங்கிய இந்த ராட்சத மரக்கட்டையானது சரக்கு கப்பலில் எடுத்து செல்லும் போது தவறி கடலில் விழுந்ததா அல்லது இலங்கை பகுதியில் இருந்து கடலில் மிதந்து வந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.