Book Fair: திருநர்களைப் பற்றி நாங்களே சொல்லத்தான் திருநங்கை ப்ரெஸ் - கிரேஸ் பானு

சாதி, மத பேதங்களைப் போல் இந்த நாட்டில் பாலின பேதங்களும் தலைவிரித்தாடி வருகிறது. இந்த பாலினப் பேதங்களால் பெண்களைப் போல, இன்னும் சொல்லப்போனால் அவர்களை விட அதிகமாகவே பாதிப்புக்குள்ளாவது திருநர் சமூகத்தினர்தான். அவர்களின் பிரதிநிதித்துவத்தை இலக்கியத்துறையில் அதிகப்படுத்தத் தொடங்கப்பட்டது தான் திருநங்கை ப்ரெஸ்.

தற்போது நடந்துகொண்டிருக்கும் 48வது சென்னை புத்தகக் காட்சியில் திருநங்கை ப்ரெஸ் அரங்கிற்குச் சென்று இதனை நிறுவியவரும், சமூக செயற்பாட்டாளருமான கிரேஸ் பானுவைச் சந்தித்துப் பேசினோம்.

திருநங்கை ப்ரெஸ்

பொது நீரோட்டத்தில் கலக்க வேண்டும்...

"மூன்று ஆண்டுகளாக திருநர் மக்களின் எழுத்துக்களைத் திருநங்கை ப்ரெஸ் மூலம் வெளியிட்டு வருகிறோம். கடந்த வருடம் 15 எழுத்தாளர்களின் படைப்புகளைக் கொண்டு வந்திருந்தோம். இந்த முறை ஏற்கெனவே வெளியான புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளோம். திருநர் மக்களும் கிராமப்புறத்தைச் சேர்ந்த வாய்ப்பு மறுக்கப்பட்ட‌ பெண்களும் எழுதுவதற்கான ஒரு தளமாகத்தான் இந்த திருநங்கை ப்ரெஸ் இயங்கி வருகிறது. எங்களுடைய நோக்கமே அறிவு பரப்புரைதான். ஏனென்றால் இங்கு திருநர் மக்கள் பற்றிய பார்வையே வேறு விதமாக இருக்கிறது. இந்த சூழலில் எங்களுடைய பார்வைகளும் சிந்தனைகளும் பொது நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு உண்டு.

எங்களைப் பற்றி நாங்கள் தானே சொல்ல வேண்டும்? இது வரை ஆண்களும் பெண்களும் மட்டுமே சொல்லி வந்த எங்களின் வலிகளையும் வேதனைகளையும் தவறவிட்ட உரிமைகளையும் நாங்கள் எங்களுடைய சொந்த குரலில் சொல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட வெளிதான் இந்த திருநங்கை ப்ரெஸ். இதில் திருநங்கை மற்றும் திருநம்பிகளுடைய எழுத்துக்களைக் கொண்டு வந்துள்ளோம். குழந்தைகளுக்கான புத்தகங்கள் தொடங்கி, கவிதை தொகுப்பு, நாவல் வரை நிறைய படைப்புகளைக் கொண்டு வந்திருக்கிறோம். எல்லா தரப்பு வாசகர்களுக்கான புத்தகங்களும் இங்கு இருக்கின்றன" என்றார் கிரேஸ் பானு.

கிரேஸ் பானு
கிரேஸ் பானு

தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஆண்டு புதிதாக வந்த புத்தகங்கள் என்றால்,

1. நான் எழுதிய பாலஸ்தீனப் பறவை - என்னுடைய பயணக்கட்டுரைகள்.

2. திருநங்கை கிரேஸ் பானுவின் சிந்தனைகள் - இரண்டாம் பாகம்,

3. கடந்த ஆண்டு வெளியான பஸ்தி புத்தகத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டு இருக்கிறோம்,

4. புழல் சிறை - சிறை பற்றி சாலமன் எழுதிய நாவல்.

இவைப் போக, பாபாசாகேப் அம்பேத்கரின் நான் ஏன் பதவி விலகினேன், எது மிகவும் கொடுமையானது தீண்டாமையா ? அடிமை முறையா? ஆகிய நூல்களையும் இந்த ஆண்டு வெளியிட்டு இருக்கிறோம்" என்றார்.

வாசகர்கள் மத்தியில் புழல் சிறை, பாலஸ்தீனப் பறவை, பஸ்தி, ஒரு கலையில் கவிதை ஆகிய புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் தெரிவித்தார் அவர்.

Vikatan Audio Books

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/Neerathikaaram

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.