நீலகிரி: ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கிய இளைஞர்கள்; ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் மாயம்!
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக சில பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பந்தலூர் அருகில் உள்ள பிதர்காடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (18), கவியரசன் (17) ஆகிய இருவரும் அருகில் உள்ள ஆற்றுக்கு நேற்றுச் சென்றுள்ளனர். நீரோட்டத்தைக் கண்ட இருவரும் ஆபத்தை உணராமல் குளிக்க முயற்சித்துள்ளனர்.
இருவரையும் ஆற்று வெள்ளம் இழுத்துச் சென்றிருக்கிறது. இதைக் கண்டு பதறிய அக்கம் பக்கத்தினர், மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், கரை ஒதுங்கிக் கிடந்த குணசேகரனின் உடலைக் கண்டறிந்துள்ளனர். வெள்ளத்தில் மாயமான கவியரசனை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த மீட்பு வீரர்கள், "ஆர்ப்பரிக்கும் அளவுக்கு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆபத்தை உணராமல் குளிக்க இறங்கியிருக்கிறார்கள்.
மீட்கப்பட்ட குணசேகரன் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். மாயமான மற்றொரு நபரை தேடி வருகிறோம். மழை காலங்களில் நீரோடைகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.