சிறுமியாய் வந்து அன்னை கோமதி செய்த அற்புதம் - கவலைகள் தீர வழிபட வேண்டிய சங்கரன்கோவில் ஆடித்தபசு!
அன்னை கோமதி பக்தர்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்தி மாற்றங்களை ஏற்படுத்துபவள். அவளின் கடைக்கண் பார்வை பட்டாலே நம் நோய் நொடி நீங்கும். வறுமை ஒழியும். செல்வ வளம் சேரும். அப்படி அன்னை கோமதி சங்கரன்கோவிலில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். அவ்வாறு 1944-ம் ஆண்டு ஆடித்தபசுத் திருவிழாவின்போது அன்னை நிகழ்த்திய அற்புதம் ஒன்றைக் காண்போம்.
ஆடித்தபசு என்றாலே சங்கரன்கோவிலைச் சுற்றியுள்ள சகல ஊர்களிலும் இருந்து பக்தர்கள் குவிவது வழக்கம். அந்த ஆண்டும் கட்டுக்கடங்காத கூட்டம். கடலில் மிதந்துவரும் கப்பலைப்போல அன்னையின் சப்பரம் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்துவந்தது.
இரவு நேரம். தெற்கு ரத வீதியில் இருக்கும் தவசு மண்டபத்தில், பல்லக்கில் எழுந்தருளியிருந்தாள் அம்பிகை. அவள் அலங்காரம் காண்பவர் கண்களைக் கொள்ளைகொண்டது. அவள் அணிந்திருந்த ஆபரணங்களின் மீது படும் தீபாராதனை வெளிச்சம் பிரகாசித்து நட்சத்திரங்கள் போல் மின்னின. அந்த அற்புதக் காட்சியை ஊர் கண்டு தரிசித்தது. அதுவும் அவள் அணிந்திருந்த தோடுகள் சந்திர சூரியர்களைப்போல் மின்னின. எல்லோரும் அன்னையை வழிபட்டுக்கொண்டிருக்க அதிகாலையில் இருந்து அன்னைக்குக் கைங்கர்யம் செய்து களைப்பில் குப்புசாமி பட்டர், அவரையும் அறியாமல் கண் அயர்ந்தார்.
நல்லவர் ஆயிரம்பேர் இருக்கும் இடத்தில் ஒரு கொள்ளையனும் மறைந்திருப்பான் அல்லவா... அப்படித்தான் அங்கே ஒரு கயவன் இருந்தான். அவன் சங்கரன்கோவில் அருகில் இருந்த அரியூரைச் சேர்ந்த கணக்குப்பிள்ளை. நல்லவேலை இருந்தும் பேராசை அவன் கண்களை மறைத்தது. உடலெங்கும் திருநீறுபூசி, கழுத்தில் ருத்திராட்சம் துலங்க முப்புரிநூல் அணிந்து பட்டரைப்போல் வேடம் பூண்டு சப்பரத்தை நெருங்கினார். அவர் தோற்றம் கண்டு யாருக்கும் சந்தேகம் எழவில்லை. அம்பாள் இருக்கும் சப்பரத்தை நெருங்கி மாலைகளைச் சரிசெய்வதுபோல் நடித்தார். அப்படியே அன்னையின் தோடுகளைத் திருடிவிட்டு அது தெரியாமல் இருக்கப் பெரிய மாலை ஒன்றைக் காதோராம் சாத்தி மறைத்துப் பின் வேகவேகமாக இறங்கிக் கூட்டத்துக்குள் கலந்தார்.
அன்னை கோமதி இந்த நயவஞ்சகத்தைப் பார்த்தாள். புன்னகைத்தாள். வேடம்பூண்டு களவு செய்தவனை வேடம் பூண்டு சிக்க வைக்கத் திருவுளம் கொண்டாள். அங்கே சிறுமியாகத் தோன்றினாள். சப்பரத்தில் கண்ணயர்ந்திருந்த குப்புசாமி பட்டரை எழுப்பினாள்.
"மாமா... மாமா என்னோட தோடுகளைத் திருடிக்கிட்டுப் போகிறான்" என்று சொல்லி அவரை உசுப்பினாள்.
கண் திறந்து அந்தச் சிறுமியைப் பார்த்த குப்புசாமி பட்டருக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த சிறுமியின் முகத்தில் இருந்த தீட்சண்யமும் ஒளியும் அவர் மேனியை சிலிர்க்கச் செய்தது. அன்றாடம் தான் வழிபடும் கோமதியே குழந்தையாக வந்ததுபோல் இருக்கிறதே என்று நினைத்தார். மீண்டும் குழந்தை அவரை உலுக்க, "என்ன... யார் அந்த படவா... என்கிட்டே காட்டு" என்று சொல்லி அவள் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டார்.

குழந்தை கணக்குப்பிள்ளை போன திசையைக் காட்டியது. பட்டர் வேகமாகக் குழந்தை காட்டிய திசையில் ஓட அந்தச் சிறுமியும் கூட ஓடினாள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஊராரும் அவர்கள் பின்னால் ஓடினர். ஊரே திரண்டு வருவது தெரியாமல் ஓரிடத்தில் நின்று தோடுகளைக் கையில் எடுத்து ரசித்துக்கொண்டிருந்தார் கணக்குப்பிள்ளை.
அந்த கும்மிருட்டிலும் தோடுகள் மின்னின. அந்தக் காலத்திலேயே அதன் விலை பதினாராயிரம் ரூபாய் இருக்குமாம். எல்லாம் தன் அதிர்ஷ்டம் என்று நினைத்துக்கொண்டு புன்னகைத்த கணக்குப்பிள்ளையின் சந்தோஷம் நிலைக்கவில்லை. மக்கள் திரண்டுவரும் சத்தம் கேட்டுத் திகைத்துப் பார்த்தார். அவர் சுதாரித்து ஓடுவதற்குள் கூட்டம் அவரை நெருங்கிவிட்டது.
"இதோ இவர்தான்" என்று சொல்லிவிட்டு சிறுமி நின்று கொள்ள மற்றவர்கள் அவரைச் சூழ்ந்தனர். குப்புசாமி பட்டர் அவரைச் சோதனையிட்டபோது அவரிடம் தோடுகள் அகப்பட்டன. அதைக் கையில் வாங்கியதும் அதிர்ந்த பட்டர், "ஆஹா, இது அம்மனின் தோடுகள் ஆயிற்றே" என்று சொல்லிவிட்டு "எங்கே அந்தக் குழந்தை" என்று திரும்பிப்பார்த்தார்.
அந்தச் சிறுமி இல்லை. பட்டர் இங்கும் அங்கும் ஓடி, "குழந்தே... குழந்தே" என்று சத்தமிட்டபடி தேடினார். ஆனால் அவளைக் காணவில்லை.
"ஆஹா... அம்மா நீயே வந்தாயா... நீ வெறும் சிலையில்லை... சக்தியுள்ள தெய்வம் என்பதை நிரூபிக்க வந்தாயா... தாயே... என்ன பாக்கியம் செய்தோம் உன்னைக் காண..." என்று சொல்லி அன்னையைத் துதித்துக்கொண்டே சப்பரம் அருகே வந்தனர். அன்னைக்கு மீண்டும் தோடுகளை அணிவித்தனர்.
அதற்குள் திருடியவனை ஊர்மக்கள் சேர்ந்து கடுமையாகத் தாக்கித் தண்டித்தனர். நல்லவேளை போலீஸ்காரர்கள் வந்து தடுத்து அவனைக் காப்பாற்றி அழைத்துச் சென்றனர். திருடன் போகும்போது ஊராரைப் பார்த்துக் கைகூப்பி வணங்கியபடி, "அன்னையின் நகையைத் திருட நினைத்த எனக்கு இந்த தண்டனை தேவைதான்" என்று புலம்பியபடியே சென்றான்.
இதுபோன்று அநேக அற்புத சம்பவங்களை சங்கரன்கோவிலில் பக்தர்கள் பலர் சொல்லக் கேட்பதைக் காணலாம். அங்கே கோமதி அம்பாள் என்பவள் வேறுயாரோ அல்ல... தங்கள் வீட்டில் ஒரு பெண். அவளை வழிபடாமல் எந்தச் செயலையும் அந்த ஊர்மக்கள் தொடங்குவதில்லை.
இங்கே அனைத்துப் பண்டிகைகளும் சிறப்புடன் நடைபெற்றாலும் ஆடித்தபசு உற்சவம் மிகவும் கோலாகலமாக நடைபெறும். ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா பத்து நாள் திருவிழாவாக நடைபெறும். உத்திராட நட்சத்திரத்தன்று ஆடித் தவசு மண்டபத்தில் கோமதியம்மன் எழுந்தருள்வாள். அன்று மாலை ஐந்தரை மணி அளவில் ஸ்ரீ சங்கர நாராயணர் திருக்காட்சி வைபவம் நடைபெறுகிறது.
சங்கரநாராயணர் திருக்காட்சி என்பது வெறும் சைவ வைணவ ஒற்றுமை மட்டுமல்ல... நமக்கு இகபர சுகங்களை அருளும் அருட்காட்சி அது. அன்னையை தபசுத் திருக்கோலத்தில் தரிசித்தால் திருமண வரம் கிட்டும் என்பது நம்பிக்கை. சங்கரநாராயணர் திருக்கோலத்தை தரிசனம் செய்தால் நம் முன்வினைப் பயன்கள் நீங்கும். நல்லருள் கைகூடும்.
இங்கே ஆலயத்தில் கிடைக்கும் புற்றுமண் பிரசாதம் நோய்களைத் தீர்க்கும் வல்லமை மிக்கது என்கிறார்கள், மேலும், இங்கே வேண்டுதல் பெட்டி ஒன்று உள்ளது. நாகதோஷம் மற்றும் தேள் முதலான விஷ ஜந்துக்களின் தொல்லைகள் நீங்க... வெள்ளி மற்றும் தாமிரத்தாலான அவற்றின் வடிவங்களையும், கண் மற்றும் கை- கால்களில் ஏற்படும் நோய் மற்றும் குறைபாடுகள் நீங்க வெள்ளி, பித்தளையால் ஆன (குறிப்பிட்ட) உடல் உறுப்புகளையும் இறைவனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.

ஆடித்தபசு நாளில் சங்கரன்கோவிலில் இருப்பவர்கள் சங்கரநாராயணர் தரிசனம் செய்து வரம்பெறுவர். மற்றவர்கள் சங்கரன்கோவில் என்கிற ஊரை மனதார நினைத்து அந்த மகாதேவனைத் துதித்தாலே ஆடித்தபசுத் திருக்காட்சியை தரிசனம் செய்த பலன் கிடைக்கும். அருகில் உள்ள சிவன் ஆலயத்துக்குச் சென்று அங்கே அம்பிகையை தரிசனம் செய்து வழிபடுங்கள். பொதுவாகவே பௌர்ணமி தினம் அம்பிகை வழிபாட்டில் விசேஷமானது.
அதிலும் அம்மனுக்கு உகந்த ஆடிமாதப் பௌர்ணமி தினமான ஆடித்தபசு நாளில் அம்பிகை வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் கைகூடும். வாழ்வில் அற்புதங்கள் நிகழும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.