Gaza: `அதிபர் ட்ரம்ப்பின் 15 அம்ச ஆவணம் - நெதன்யாகு நிராகரிப்பும் அமெரிக்கா பதிலும்!
காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
கடந்த 2023 அக்டோபர் 7 அன்று, காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கையில் காசாவில் 73,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஐநா தகவல்படி, காசாவின் சுமார் 19 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து தாக்குதல் நடந்துவருகிறது. கடந்த அக்டோபர் மாதம் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்த பிறகும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதல்களை முழுமையாக நிறுத்திவிட்டு படைகளைத் திரும்பப் பெற்றால், எங்கள் கனரக ஆயுதங்களை ஒப்படைப்போம் என்று ஹமாஸ் நிபந்தனையுடன் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களின் முழுமையான ஆயுதக் களைவுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனவே, இருதரப்பும் டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டமான 15 அம்சக் ஆவணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்." என அமெரிக்காவின் சமாதான வாரியம் (Board of Peace) அறிவித்திருந்தது.
இஸ்ரேலில் விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், தனது வலதுசாரி கூட்டணிக் கட்சிகளின் கடுமையான அழுத்தத்தில் நெதன்யாகு உள்ளார். தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் உள்ளிட்ட தீவிர வலதுசாரி தலைவர்கள் இந்தத் திட்டத்தை ஏற்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ``அமெரிக்கா முன்வைத்திருக்கும் 15 அம்ச ஆவணத்தை இஸ்ரேல் நிராகரிக்கிறது. ஹமாஸ் முற்றிலும் முடக்கப்படும் வரை ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படாது. எங்கள் நாட்டு மக்களுக்கான அச்சுறுத்தல்களை முறியடிக்கும் நடவடிக்கைகள் தொடரும். போலித்தனமான ஆயுதக் களைவை ஏற்க முடியாது. படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்." என்றார்.

அதேவேளையில், பிபிசியிடம் பேசிய ஹமாஸ் நிர்வாகி ஒருவர், ``இந்த ஒப்பந்தத்திற்குத் தங்களுடைய ஆதரவு தொடர்கிறது. 15 அம்சத் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம். ஒப்புக் கொள்ளப்பட்ட விதிகளின்படி அனைத்துத் தரப்பினரும் நடப்பதை சர்வதேச மத்தியஸ்தர்கள் உறுதி செய்ய வேண்டும்." என்றார்.
அதேசமயம், டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தை அமல்படுத்த நியமிக்கப்பட்ட மூத்த தூதர் நிகோலே மிளடேனோவ், ``இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது. ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடுவதை உறுதி செய்த பிறகே இஸ்ரேலியப் படைகள் விலகக் கோரப்படும்." என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


