வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026: ரூ.1 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து
‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ சென்னையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கிலும் ரூ.67,452 கோடி முதலீடு மற்றும் 1,06,998 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் 55 புதிய (Greenfield) திட்டங்களும், 50 விரிவாக்கத் (Brownfield) திட்டங்களும் அடங்கும். தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாள்களில் மொத்தம் ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 1,21,788 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இம்மாநாட்டில் விண்வெளி, மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் ஜவுளி போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. தூத்துக்குடியில் தனியார் ஏவுகலன் உற்பத்திக்காக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (ரூ.250 கோடி) மற்றும் அக்னிகுல் காஸ்மோஸ் (ரூ.400 கோடி) ஆகிய நிறுவனங்களும், கிருஷ்ணகிரியில் அல்ட்ராவயலட் நிறுவனம் (ரூ.779 கோடி) மின்சார வாகன உற்பத்தி ஆலையையும் அமைக்கவுள்ளன.
சென்னையின் முன்னணி நிறுவனமான சூப்பர் மைக்ரோ (ரூ.477 கோடி), திருவள்ளூரில் YKK நிறுவனம் (ரூ.1,651 கோடி), காஞ்சிபுரத்தில் ஜெர்மனியின் BITZER நிறுவனம் (ரூ.300 கோடி) ஆகியவை புதிய திட்டங்களைத் தொடங்குகின்றன.
மேலும், JK டயர் (ரூ.5,143 கோடி), டைம்லர் (ரூ.4,000 கோடி) மற்றும் ஆவிட் குழுமம் (ரூ.7,000 கோடி) ஆகிய நிறுவனங்கள் பெரிய அளவிலான முதலீட்டு விரிவாக்கங்களை அறிவித்துள்ளன. இத்திட்டங்கள் ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாகச் செயல்படுத்தப்படவுள்ளன.
முதலீட்டு ஒப்பந்தங்களைத் தவிர்த்து, பன்னாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் கஜகஸ்தான், நியூசிலாந்து மற்றும் ரஷ்யா (Sberbank) ஆகிய நாடுகளின் அமைப்புகளுடன் 7 நிறுவன ரீதியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் கீழ் இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்காக டிட்கோ நிறுவனம் பாஷ் (Bosch) நிறுவனத்துடனும், கோயம்புத்தூரில் செமிகண்டக்டர் பயிற்சி மையம் அமைக்க WOWsemi நிறுவனத்துடனும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வால்மார்ட் விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்த ஐடியா டூ இம்பாக்ட் ஃபவுண்டேஷன் உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, 9 மாவட்டங்களில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களின் சந்தை வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படவுள்ளன.

அத்துடன், ரூ.4,476 கோடி முதலீட்டில் எல் & டி, ஸ்ரீ சிமெண்ட்ஸ் உட்பட 8 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதோடு, திருநெல்வேலியில் விக்ரம் சோலார் உட்பட ரூ.2,676 கோடி மதிப்பிலான 5 முடிவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், திருச்சியில் ரூ.350 கோடியில் டிஷ்யூ காகித உற்பத்தி, வல்லம் வடகலில் ரூ.250 கோடியில் ஏரோஹப் வளாகம், சிப்காட்டின் 11 புதிய கட்டடங்கள், செய்யாறு மற்றும் கங்கைகொண்டானில் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகள் என மொத்தம் ரூ.777.74 கோடி மதிப்பிலான முடிவுற்ற உள்கட்டமைப்புத் திட்டங்களை முதலமைச்சர் திறந்து வைத்திருக்கிறார்.
நிறைவாக, 9 முன்னணி தொழில் நிறுவனங்களில் தேர்வான 20 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் அவர் வழங்கியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

