Doctor Vikatan: நுரையீரல் பிரச்னைக்கு ஆங்கில மருந்து, மலச்சிக்கலுக்கு சித்த மருந்து எடுக்கலாமா?
Doctor Vikatan: நான் சுமார் ஆறு ஆண்டுகளாக சிஓபிடி (COPD ) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பிரச்னைக்காக மருந்துகள் (டாக்ஸோலின், மான்டெக்-எல்சி உள்ளிட்டவை) எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
அதனுடன் மலச்சிக்கலுக்கான ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொண்டதில் சிக்கல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்குப் போய் விட்டது. அது பற்றிய விவரங்களைக் கேட்டபோது ஆங்கில மருந்துகள் மற்றும் சில ஆயுர்வேத மூலிகைகளின் சேர்க்கையில் ஏற்பட்ட எதிர்வினை காரணமாக இருக்கலாம் என்று சொன்னார்கள்.
இந்த நிலையில் நான் மலச்சிக்கல் பிரச்னைக்காக திரிபலா சூரணம் எடுத்துக்கொள்ளலாமா என்பதையும் தெளிவுபடுத்தவும்.
-மலைசாமி, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
திரிபலா சூரணம் என்பது மலச்சிக்கலைப் போக்கக்கூடிய ஒரு மருந்துதான். சிஓபிடி (COPD) எனப்படும் சுவாசப் பிரச்னைக்குச் சிகிச்சை பெற்றுவரும் அதே வேளையில், நீங்கள் தாராளமாக திரிபலா சூரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
அதிக வீரியமுள்ள அலோபதி மருந்துகளை எடுக்கும்போது மட்டுமே மருந்துகளுக்கிடையேயான பக்க விளைவுகள் (Drug Interaction) ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், நீங்கள் தற்போது எடுத்துவரும் சாதாரண மருந்துகளோடு திரிபலா சூரணத்தை எடுப்பது பாதுகாப்பானதுதான்.
தற்போது அலோபதி சிகிச்சை பெற்று வந்தாலும், அதனுடன் ஒருங்கிணைந்த முறையில் சித்த மருத்துவரையும் அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. சித்த மருந்துகளையும் சேர்த்து எடுக்கும்போது நோயின் அறிகுறிகளில் இருந்து சீக்கிரமாக நிவாரணம் பெற வாய்ப்புள்ளது.

மற்றபடி, திரிபலா சூரணம் அல்லது குறிப்பிடப்பட்டுள்ள மூலிகை மருந்துகளை உட்கொள்வதால் எந்தப் பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை. எனினும், எந்த மாதிரியான மருந்துகளை எந்த அளவில் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலோடு தெளிவுபடுத்திக் கொண்டு உட்கொண்டால் எவ்விதச் சிக்கலும் இருக்காது.
அடுத்தவர்கள் பயன்படுத்துகிறார்கள், வாட்ஸ்அப் ஃபார்வேர்டில் வந்தது என்பதையெல்லாம் நம்பி, எந்த மருந்தையும் சுயமாக எடுப்பது எப்போதும் யாருக்கும் ஆபத்தானதுதான். மலச்சிக்கலுக்கான மருந்து எடுப்பதைவிடவும், முக்கியமானது அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரி செய்வது. எனவே, முதலில் அதை கவனியுங்கள்.
டாக்டர் விக்ரம்குமார்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில் சித்த மருத்துவராகப் பணிபுரிபவர். சித்த மருத்துவத் துறையில் 16 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
