தேசிய அளவில் அதிகரிக்கும் H1N1 காய்ச்சல் பாதிப்பு - சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவகாலக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்ஃப்ளுயன்ஸா ஏ (Influenza A) வைரஸின் H1N1 வகை தாக்கத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லியில் இதுவரை 2,300-க்கும் மேற்பட்ட H1N1 நோய்த்தொற்று வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு H3N2 வைரஸ் பரவல் அதிகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு H1N1 பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்து மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

H1N1 வைரஸ்

H1N1 என்பது இன்ஃப்ளுயன்ஸா ஏ வைரஸின் ஒரு துணைப் பிரிவு ஆகும். காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்கள் வெளிப்படுத்தும் சுவாசத் துகள்கள் வழியாக இது பரவுகிறது. இது வழக்கமான பருவகாலக் காய்ச்சலாகவே காணப்பட்டாலும், தற்போது பரவி வரும் H1N1 வைரஸில் புதிதாக ஆபத்தான மரபணு மாற்றம் (Mutation) எதுவும் கண்டறியப்படவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.

தேசிய அளவிலான நிலவரம்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் H1N1 பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. ICMR ஆய்வகக் கண்காணிப்பில் பரிசோதிக்கப்பட்ட இன்ஃப்ளுயன்ஸா ஏ மாதிரிகளில் சுமாராக 98 சதவீதம் H1N1 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

டெல்லி நிலவரம்

தலைநகர் டெல்லியில் இதுவரை ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட 2,308 H1N1 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒரே நாளில் 114 புதிய H1N1 வழக்குகளும், 159 காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய பாதிப்புகளும் பதிவாகியுள்ளதாகச் சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அறிகுறிகள் மற்றும் அதிக ஆபத்துள்ளவர்கள்

* முக்கிய அறிகுறிகள்: திடீர் காய்ச்சல், குளிர், வறட்டு இருமல், தொண்டை வலி, உடல்வலி, தலைவலி மற்றும் அதிக சோர்வு.

* பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள்: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் ஆஸ்துமா, சி.ஓ.பி.டி (COPD), நீரிழிவு போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள். இவர்களுக்குத் தொற்று தீவிரமடையும் ஆபத்து அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர்களின் அறிவுறுத்தல்கள்

H1N1 என்பது வைரஸ் தொற்று என்பதால், மருத்துவர்களின் பரிந்துரையின்றி Azithromycin போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தாமாக உட்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவ ஆலோசனையுடன் தேவைக்கேற்ப ஆன்டி-வைரல் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, தீவிர சோர்வு அல்லது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் நோயாளிகள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் எனச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பாதிப்புகள் அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் இருமும்போது கைக்குட்டையைப் பயன்படுத்துவது போன்ற அடிப்படை முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.