M Sand, ஜல்லி: தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல இடைக்காலத் தடை - 9 காரணங்கள்!
தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்து செல்ல தமிழ்நாடு அரசு 3 மாதங்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
என்ன உத்தரவு?
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் தமிழ்நாடு சட்டவிரோதக் கனிமச் சுரங்கம், போக்குவரத்து மற்றும் கனிமப் பொருட்கள் சேமிப்புத் தடுப்பு மற்றும் கனிம வியாபாரிகள் விதிகள், 2011 -ல், புதிய விதி 3(A) சேர்க்கப்பட்டுத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன் படி, கரடுமுரடான கற்கள் (rough stone) மற்றும் அதன் ஜல்லிப் பொருட்களின் (aggregates) போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கு புதுச்சேரி மற்றும் காரைக்காலைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்குக் கற்களைக் கொண்டுச் செல்ல தற்காலிகத் தடை.
உடனடியாக அமலாகி உள்ள இந்தத் தற்காலிகத் தடை மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்.
இந்தத் தடையில் கண்டாக்கள், பாறாங்கற்கள், எம்-சாண்ட், மெட்டல் ஜல்லி, பாலாஸ்ட்கள், மாவரைக்கும் கற்கள், கைக் சக்கைகள் மற்றும் கட்டடம் மற்றும் சாலை அமைக்கும் கற்கள் உள்ளிட்ட உடைந்த பொருட்கள் ஆகியவையும் அடங்கும்.
ஏன் இந்த உத்தரவு?
1. கனிமவளப் பொருள்களின் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கும், தமிழ்நாட்டிற்குள் போதுமான அளவு கனிமங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
2. மேலும், பல அச்சுகள் கொண்ட கனரக வாகனங்கள் (multi-axle vehicles) உட்பட அதிக சுமையேற்றிச் செல்லும் லாரிகளின் தொடர்ச்சியான போக்குவரத்தால் உள்ளூர் சாலைகள் கடுமையாகச் சேதமடைகின்றன. மேலும் எல்லைச் சோதனைச் சாவடிகளுக்குச் செல்லும் பல வழிகள் குறுகலாக உள்ளதால், இத்தகைய இடைவிடாத கனரகப் போக்குவரத்தைக் கையாளும் வகையில் உள்ளூர் உள்கட்டமைப்பு அமையவில்லை.

3. எல்லை நோக்கிச் செல்லும் லாரிகளின் அதிகப்படியான எண்ணிக்கை காரணமாக உள்ளூர் பயணிகளுக்குப் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறுகிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்வதால் சாலை விபத்துகள் அதிகரிப்பதுடன், அவற்றில் பெரும்பாலானவை உயிரிழப்பை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன.
4. தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சியும் நகரமயமாக்கலும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்குப் பாறை மற்றும் ஜல்லிப் பொருட்கள் போன்ற கட்டடக் கட்டுமானப் பொருட்களின் தடையற்ற விநியோகம் தேவைப்படுகிறது.
5. தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக வெட்டி எடுக்கக்கூடிய கரடுமுரடான கல் படிவுகள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே கிடைக்கின்றன; கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இத்தகைய கனிம வளங்கள் உள்ள பகுதியின் பெரும் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் சூழலியல் உணர்திறன் மண்டலங்களில் (Eco-Sensitive Zones) அமைந்துள்ளன.
6. மாநிலத்தில் தற்போது இயங்கி வரும் குவாரிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கரடுமுரடான கற்கள் மற்றும் ஜல்லிப் பொருட்களின் அளவு, உள்கட்டமைப்பு, வீட்டுவசதி மற்றும் தொழில்துறை வளர்ச்சி நடவடிக்கைகளால் ஏற்படும் அதிகரித்து வரும் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை.

7. அண்டை மாநிலங்களுக்குக் கட்டுமான ஜல்லிப் பொருட்கள் பெருமளவில் கொண்டு செல்லப்படுவதால், கட்டுமானப் பொருட்களின் இருப்பு மேலும் குறைந்து, செயற்கையான தேவை-விநியோகச் சமநிலையின்மை ஏற்படுவதுடன், கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கிறது. இது மாநிலத்திற்குள் நடைபெறும் அரசு மற்றும் தனியார் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களைப் பாதிக்கிறது.
8. கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களில் கரடுமுரடான பாறைக் கற்கள் பற்றாக்குறையான கனிமம் அல்ல.
9. இந்த மிகப்பெரிய தேவை-விநியோக இடைவெளியானது, அறிவியல் பூர்வமற்ற/சட்டவிரோதச் சுரங்கத் தொழில், சேமிப்பு மற்றும் கற்கள் மற்றும் ஜல்லிப் பொருட்களின் போக்குவரத்தைத் தூண்டுகிறது. இது பெரும்பாலான வழக்குகளில் அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு அப்பால் அதிகப்படியான கனிமங்களை வெட்டி எடுப்பதற்கு வழிவகுத்து, மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியலுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
ஆகிய காரணங்களால் இந்தத் தற்காலிகத் தடை கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


