Doctor Vikatan: இள வயதினரையும் பாதிக்கும் கேட்டராக்ட் பிரச்னை... வராமல் தடுக்க வாய்ப்பு உண்டா?
Doctor Vikatan: வயதானவர்களுக்கு வந்துகொண்டிருந்த கேட்டராக்ட் பிரச்னை, இப்போதெல்லாம் இள வயதினருக்கும் வருகிறது. கேட்டராக்ட் பிரச்னை ஏன் வருகிறது... அதை முன்கூட்டியே தவிர்க்க முடியுமா? வந்த பிறகு நிச்சயம் அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.
வாழ்க்கை முறை மாற்றங்கள் (Lifestyle Factors) காரணமாக இன்றைய காலகட்டத்தில் ஐடி (IT) துறையில் பணிபுரிபவர்கள் உட்பட பல இளைஞர்கள் மிகுந்த மனஅழுத்தத்திற்கு (Stress) ஆளாகிறார்கள். அத்துடன் அதிகளவில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களால் நீரிழிவு (Diabetes) மற்றும் உயர் ரத்த அழுத்தம் (Hypertension) போன்றவை பாதிக்கின்றன. முக்கியமாக நீரிழிவு நோயானது, கண்புரை சீக்கிரமே வர மிக முக்கியமான காரணமாக அமைகிறது.
கார்டிகோஸ்டீராய்டு (Corticosteroids) போன்ற ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துவதும் இளம் வயதிலேயே கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. கண்ணில் ஏற்படும் காயங்கள் அல்லது விபத்துகள் (Eye Injuries / Ocular Trauma) காரணமாகவும் கண்புரை உருவாகலாம்.
கண் சார்ந்த சில நோய்களும் (Local Eye Diseases) கண்புரை பாதிப்புக்குக் காரணமாகலாம். உதாரணத்துக்கு, யூவியடிஸ் (Uveitis) போன்ற கண் வீக்கங்கள் (Eye inflammation) அல்லது ஹை மயோப்பியா (High Myopia) எனபபடும் கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்குக் கண்புரை விரைவில் வரக்கூடும். பரம்பரை அல்லது மரபணு சார்ந்த காரணங்களாலும் (Genetic Factors) கண்புரை மிக விரைவாக வரக்கூடும்.

இன்றைய காலகட்டத்தில் கண்புரை சிகிச்சைக்குப் அதிநவீன தீர்வுகள் உள்ளன.
ஃபெம்டோசெகண்ட் கண்புரை அறுவை சிகிச்சை (Femto-second Cataract Surgery என்பது இந்தப் பிரச்னைக்கான லேட்டஸ்ட் சிகிச்சை. இது பிளேடு இல்லாத (Bladeless) நவீன சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது. சொட்டு மருந்து (Eye drops) மட்டுமே பயன்படுத்தி 10 முதல் 15 நிமிடங்களுக்குள் இந்த அறுவை சிகிச்சையை முடித்துவிடலாம். சிகிச்சை முடிந்த கையோடு நோயாளிகள் உடனே வீட்டிற்குத் திரும்ப முடியும்.
சாதாரண வகை லென்ஸான மோனோஃபோகல் லென்ஸ் (Monofocal Lenses), பார்வையின் ஆழத்தை அதிகரிக்கும் ஈடாஃப் லென்ஸ் (EDOF - Extended Depth of Focus Lenses), மூன்று விதமான பார்வைகளுக்கும் உதவும் டிரைஃபோகல் லென்ஸ் (Trifocal Lenses) என இந்தச் சிகிச்சையில் பலவித லென்ஸ் பொருத்தப்படும்.
முதலாவது மற்றும் இரண்டாவது வகை லென்ஸ்களைப் பொறுத்தவரை, சிகிச்சை முடித்த பிறகு படிப்பதற்கு (Reading) மட்டும் கண்ணாடி தேவைப்படும். ஆனால், மூன்றாவது வகையான டிரைஃபோகல் லென்ஸ் பொருத்திக் கொண்டால் கண்ணாடி அணிய வேண்டிய தேவையே இருக்காது. நோயாளிகளின் வேலை முறை மற்றும் வசதிக்கேற்ப அவர்களுக்கு ஏற்ற லென்ஸைத் தேர்ந்தெடுத்து இந்த அறுவை சிகிச்சையைச் செய்து கொள்ளலாம்.
டாக்டர் விஜய் ஷங்கர்:
சென்னை, ஆர்.ஏ.புரத்தில் சங்கர் ஐ கேர் கிளினிக் வைத்து நடத்துகிறார். இத்துறையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


