`நான் அந்த 56 வயது இளைஞரைப் பற்றி பேசவில்லை.! - நாடாளுமன்ற வளாகத்தில் மோடி மறைமுக கிண்டல்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜுலை.20) கூடி இருக்கிறது. இந்நிலையில் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் உரையாற்றி இருக்கிறார்.
மழைக்கால கூட்டத்தொடர்
"மழைக்காலமாக இருந்தாலும் சரி, மழைக்கால கூட்டத்தொடராக இருந்தாலும் சரி இரண்டுமே சுறுசுறுப்பாக இருந்தால், அவை மிகவும் பயனுள்ளதாக அமையும். இரண்டும் பயனுள்ளதாக இருக்கும்போது, அது நாட்டின் நலனுக்கும், அனைத்து உயிரினங்களின் நல்வாழ்விற்கும் வழிவகுக்கும்.
அதனால்தான், மழைக்காலம் சுறுசுறுப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்றும், மழைக்கால கூட்டத்தொடரும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
`நான் 56 வயது இளைஞரைப் பற்றி பேசவில்லை
இந்தியாவின் இளைஞர்கள் விண்வெளியில் ஒரு புதிய பயணத்தை தொடங்கியுள்ளனர். ஸ்கைரூட் (Skyroot) என்ற ஸ்டார்ட்அப்பில் பணிபுரியும் முழு குழுவினரின் சராசரி வயது வெறும் 28 வயது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது. இது போன்ற இளைஞர்கள்தான் இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளனர். நான் 56 வயது இளைஞரைப் பற்றி பேசவில்லை.(ராகுல் காந்தி மறைமுகமாக குறிப்பிட்டார்)
கடந்த ஒரே ஒரு மாதத்தில், நாடு பல மைல்கற்களை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடருக்கு சற்று முன்பு, ஒரு இந்தியக் குடிமகன் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தார். இப்போது சமீபத்தில், ஒரு இளம் இந்திய ஸ்டார்ட்அப் ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளது. உலகில் மிகச் சில நாடுகள்தான் இந்த அளவிற்கு தனியார் நிறுவனங்களின் முயற்சியை கண்டிருக்கின்றன; இந்தியாவின் இளைஞர்கள் விண்வெளியில் ஒரு புதிய பயணத்தை தொடங்கியுள்ளனர்.
இது ஒரு மகத்தான வெற்றி.
நெருக்கடி
பல்வேறு பகுதிகளில் நிலவும் போர் அச்சுறுத்தல் குறித்து நமக்கு நன்கு தெரியும், இது குறித்து முழு உலகமும் கவலைப்படுகிறது. மேற்கு ஆசியாவில் நடந்த மோதல், இந்தியா போன்ற எரிசக்திக்காக பிற நாடுகளை சார்ந்திருக்கும் நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி, உரங்கள், இரசாயனங்கள் தொடர்பாக ஏராளமான தடைகளும் நெருக்கடிகளும் தோன்றின.
இருந்தபோதிலும், இந்தியா 7.7 சதவீத வளர்ச்சி விகிதத்தை பராமரித்து, உலகின் வேகமாக வளரும் முன்னணி பொருளாதாரமாக உருவெடுத்தது. இது இந்தியாவின் உள்ளார்ந்த வலிமையை பிரதிபலிக்கிறது, மேலும் புதிய உயரங்களை எட்ட நாடு எத்தகைய உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் லட்சியம் கொண்டுள்ளது என்பதற்கான ஒரு தடயத்தை காட்டுகிறது. இந்த பின்னணியில்தான் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. நாடு ஒரு வேகத்தை பெற்றுள்ளது, மேலும் பாராளுமன்றத்தின் உணர்வு அந்த வேகத்திற்கு புதிய ஆற்றலை புகுத்துகிறது.

சீர்திருத்த எக்ஸ்பிரஸ்
நாடு சீர்திருத்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியதன் விளைவுதான், இந்தியாவின் இளைஞர்கள் இத்தகைய பெரும் தைரியத்தை காட்டவும் வெற்றியை அடையவும் முடிகிறது. சமீபத்தில், ராஜஸ்தானில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு, மூன்றாவது செமிகண்டக்டர் ஆலை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
சற்று முன்பு, பசுமை ஹைட்ரஜன் இயக்கப்படும் ரயில் குடிமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது; உலகில் மிகச் சில நாடுகள் மட்டுமே இந்த வசதியை கொண்டுள்ளன. ஆயினும், இந்தியா அறிமுகப்படுத்திய ஹைட்ரஜன் ரயில், மிக சக்தி வாய்ந்த என்ஜினைக் கொண்டதாகவும், அதன் வகையிலேயே மிக நீளமான ரயிலாகவும் உள்ளது. இந்த சாதனை, இந்தியாவின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், புதுமையாளர்கள், தொழில்முனைவோர், மற்றும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பிற்கு சான்றாகும். இவர்கள் அனைவரும் நாட்டிற்காக ஒரே இலக்குடன் வாழ்ந்து பணியாற்றி வருகிறார்கள்.
உண்மைகளும் தர்க்கமும் இருக்கும் இடத்தில், புயலுக்கு இடமில்லை என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உள்ளது. நாட்டின் இலக்குகளை அடைவதற்கு நேர்மறையான மனப்பான்மை அவசியமானது. நமது சபையில் மிகவும் அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் கட்சி சார்பு எதுவாக இருந்தாலும், அவர்கள் ஏராளமான அனுபவத்தை கொண்டுள்ளனர்.
இது போன்ற ஒரு காலகட்டத்தில், பாராளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் அவர்களின் அனுபவமும் அறிவும் தேவைப்படுகிறது. எனவே, பாராளுமன்றத்தின் செயல்பாடு, அர்த்தமுள்ள விவாதங்கள், மற்றும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான கூட்டு உறுதிப்பாடு ஆகியவை, இந்த நேரத்தின் தேவை என நான் நம்புகிறேன். லட்சியங்களால் நிரம்பிய நாட்டின் இளைஞர்கள், நாம் முன்னேற வேண்டும் என கோருகின்றனர்.

வாதங்களும் உண்மைகளும் உறுதியாக இருக்கும்போது, அமைதியான தோற்றத்துடன் கூட ஒருவரால் தன் குரலை திறம்பட எடுத்துச்செல்ல முடியும். இது போன்ற வாதங்களாலும் உண்மைகளாலும் சபையின் விவாதங்கள் செழுமையடையும் என நம்புகிறேன்.
ஒவ்வொரு குரலும் வாய்ப்பு பெறட்டும், ஒவ்வொரு கருத்தும் மதிக்கப்படட்டும். இந்த சபையின் நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் பங்கேற்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் நான் அழைக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

