நெல்லை: பகலில் மீன்கடைத் தொழிலாளி; இரவில் பெண்களின் உள்ளாடைகள் திருடன் - இளைஞர் சிக்கியது எப்படி?
நெல்லை மாநகரில் சமீப காலமாகவே வீடுகளில் கொடிகளில் காயப் போட்டிருந்த பெண்களின் உள்ளாடைகள் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக திருடு போய்க் கொண்டிருந்தன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மகளிர் தங்கும் விடுதி வளாகத்தில் கொடிகளில் காயப் போட்டிருந்த உள்ளாடைகள் மட்டும் குறிவைத்து திருடப்பட்டு வந்துள்ளது. பாளையங்கோட்டை என்.ஜி.ஓ ’பி’ காலனியைச் சேர்ந்தவர் வள்ளி செல்வம். இவர், பெருமாள்புரம் ‘சி’ காலனியில் மகளிர் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு கொடிகளில் பெண்களின் பிற துணிகள் தவிர உள்ளாடைகள் மட்டும் காணாமல் போயிருந்தது. ஒரு உள்ளாடை கூட இல்லாத நிலையில் பெண்கள், விடுதியின் வார்டன் கோபிஷாவிடம் கூறியுள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த கோபிஷா, விடுதியின் உரிமையாளர் வள்ளி செல்வத்திடம் கூறியுள்ளார். விடுதியின் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை பார்த்த போது அதிகாலை சுமார் 4 மணியளவில் இளைஞர் ஒருவர் இந்த விடுதியின் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து உள்ளே நுழைகிறார். ஆனால், முகமூடி எதுவும் அணியவில்லை. அவர், அங்குள்ள கொடிகளில் பெண்கள் துவைத்துக் காயப் போட்டிருந்த உள்ளாடைகளை ஒவ்வொன்றாக எடுத்து சேகரித்து அதனை ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு பைக்கில் அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதனையடுத்து விடுதி உரிமையாளர் வள்ளி செல்வம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விடுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மட்டுமல்லாமல் துணிகளை மூட்டையாகக் கட்டிக் கொண்டு பைக்கில் அந்த நபர் திரும்பிச் சென்ற பகுதிகளிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்பகுதியில் அதே நபர் இதே போல இரண்டு காம்பவுண்ட் வீடுகளிலும் பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக மேலப்பாளையத்தைச் சேர்ந்த தமீமுன் அன்சாரிதான் இந்த உள்ளாடைகள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. காலை நேரங்களில் அங்குள்ள ஒரு மீன் இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது.

மற்ற நேரங்களில் இயல்பாக இருக்கும் அவர், பெண்களின் உள்ளாடைகளைப் பார்த்தால் மட்டும் அதை திருடி பத்திரப்படுத்தும் மனைநிலை கொண்டவர் என போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்யும் அன்று கூட மேலப்பாளையம் பகுதியிலுள்ள ஒரு மகளிர் விடுதியில் உள்ளாடைகளை திருடியுள்ளார். அவரது வீட்டில் 4 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த உள்ளாடைகளை போலீஸார் மீட்டு மகளிர் விடுதிகளில் ஒப்படைத்தனர். பின்னர், அவரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

