விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு இடையே வெளியேறி சென்ற அமைச்சர் ரமேஷ்! - என்ன நடந்தது?
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய முழு பயிர்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சி மாவட்டம், சமயபுரம் பள்ளிவிடை பாலம் சர்வீஸ் சாலை அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வேளாண்துறை அமைச்சர் வினோத், திருச்சி பொறுப்பு அமைச்சர் ரமேஷ் உள்ளிட்டவர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பேசிய அமைச்சர் ரமேஷ், ``தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற முதல் 100 நாள்களிலேயே விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தியுள்ளார். விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக, நேற்று பப்ளிக் ஹவுஸ் டிபார்ட்மென்ட் மற்றும் யூஆர்டி (URD) அமைச்சர்கள் உட்பட ஒன்பது சீனியர் அமைச்சர்கள் ஒன்றாக அமர்ந்து சுமுகமான முறையில் விரிவான ஆலோசனை நடத்தியுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசுக்கு முழு விருப்பம் உள்ளது. விவசாயிகளுக்கு எந்த இடத்திலும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் முதலமைச்சர் மிகத் தெளிவாக இருக்கிறார்.
விவசாயிகள் தற்போது கேட்கும் கூடுதல் நலத்திட்டங்கள் மற்றும் கடன் தள்ளுபடிகளைச் செயல்படுத்த தோராயமாக ரூ. 3,000 கோடி கூடுதல் நிதி தேவைப்படுகிறது. எனவே, அரசின் தற்போதைய நிதிநிலைமைக்கு ஏற்ப எந்தெந்த நிதிகளை மாற்றி அமைக்க முடியும், நிதிச்சுமையை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து நிதியமைச்சகம் மற்றும் துறை அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்த பிறகே முதலமைச்சரிடம் சமர்ப்பித்து இறுதி முடிவு எடுக்க முடியும். தற்போது இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசு புதிய அறிவிப்புகளையோ உத்தரவாதங்களையோ உடனடியாக வழங்க முடியாது.

எனவே, நிதிச் சூழலை ஆய்வு செய்ய 20 நாள்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது. இடைத்தேர்தல் முடிந்தவுடன் இதற்கான தெளிவான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார். அதிகாரிகள் யாரும் விவசாயிகளை வற்புறுத்தவோ, சங்கடத்திற்கு உள்ளாக்கவோ கூடாது என்று சீனியர் அமைச்சர்கள் மூலம் நேற்றைய கூட்டத்திலேயே மிகத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் இந்த அரசு முழுமையாக மதிக்கிறது. அரசு பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராகவே இருக்கிறது. எதையும் செய்ய முடியாது என்று மறுக்கவில்லை. எனவே, அதிகாரிகளின் ஆய்வுப் பணிகள் மற்றும் முதலமைச்சரின் முடிவுக்குத் தேவையான இந்த 20 நாள்கள் அவகாசத்தைக் கொடுத்து, போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு விவசாயிகள் பெருமக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டார். இதற்கிடையே அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போதே சலசலப்பு ஏற்பட்ட நிலையில், இடையிலேயே அமைச்சர் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

அமைச்சர் சென்றபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, ``சென்னை பேச்சுவார்த்தையில் கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடிக்கு ரூ. 3,000 கோடி அல்ல, மொத்தம் ரூ. 9,000 கோடி தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து நிதியமைச்சகம் மற்றும் செயலாளர்களுடன் பேசி ஒரு வாரத்திற்குள் ஆலோசிப்பதாக அமைச்சர்கள் கூறியிருந்தனர். ஆனால், கூட்டத்தில் தள்ளுபடித் தொகை எவ்வளவு, சிறு-குறு விவசாயிகள் மற்றும் பெரிய விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி அளவு என்ன என்பது போன்ற விவரங்களை அமைச்சர்கள் தெளிவாக அறிவிக்கவில்லை.
அதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் கூச்சலிடவே அமைச்சர்கள் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டனர். எனவே, அரசின் இந்த 20 நாள் கால அவகாசக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா அல்லது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதா என்பது குறித்து விவசாயிகள் தற்போது ஒன்றுகூடி ஆலோசித்து முடிவு செய்யவுள்ளனர்" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
