குறும்படங்களுக்கான தளம் இது - இயக்குநர் பத்ரி வெங்கடேஷின் மகள் தீக்ஷாவின் முன்னெடுப்பு!
குறும்படங்கள் இன்று பல இயக்குநர்களுக்கு சினிமாவில் முகவரியை தேடி தருகிறது. தற்போது தீக்ஷா என்பவர் குறும்பட திரையிடல்களுக்காகவே, தி திரை ஆன்சம்பிள் என்கிற பெயரில் பிரத்யேகமாக ஒரு தளத்தை உருவாக்கியிருக்கிறார்.
சினிமா தொடர்பான உரையாடல்களையும் இதன் மூலம் நிகழ்த்தவிருக்கிறாராம். தீக்ஷா, பானா காத்தாடி படத்தின் இயக்குநர் பத்ரி வெங்கடேஷின் மகள். தீக்ஷாவிடம் இது தொடர்பாக பேசினோம்.
நம்மிடையே பேசிய அவர், "குறும்பட இயக்குநர்களுக்கு ஒரு தளம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இந்த தி திரை ஆன்சம்பிள் குழுவின் முதன்மை நோக்கம். ஏனென்றால், நாம் இப்போது யூடியூப்பில் ஒரு வீடியோவைப் பதிவிடுகிறோம் என வைத்துக் கொள்வோம். அது பெரிய அளவில் ரீச் ஆகாத நம்முடைய சொந்தக் சேனலாக இருக்கும் பட்சத்தில், அதிகபட்சமாக 100 அல்லது 500 வியூஸ் வரை போகலாம். அதற்குப் பிறகு அது காணாமல் போய்விடுகிறது. மேலும் நிறைய வீடியோக்கள் வந்துகொண்டே இருப்பதால், நாம் பதிவிட்ட சில வீடியோக்கள் நமக்கே மறந்துபோகும் அளவிற்கு மறைந்துவிடுகின்றன.

அதனால், வழக்கமான திரைப்படங்களைப் பார்ப்பது போல குறும்படங்களைப் பார்ப்பதற்கும் என்று ஒரு பார்வையாளர்கள் கூட்டம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதுதான் எங்களுடைய முக்கிய நோக்கம். இதுதவிர, நான் கல்லூரியில் படிக்கும்போது பல நிகழ்வுகளை நடத்தியிருக்கிறேன். அதைச் சாதாரண மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதற்காக, சினிஃபைல்ஸ் காம்பாஸ் (Cinephiles Compass) என்ற பெயரில் திரைத்துறையினர் பங்குபெறும் ஒரு பகுதியை இதில் ஒரு அங்கமாக வைத்தோம். இதன் மூலம் சினிமாட்டோகிராஃபர்கள், இயக்குநர்கள் என திரைத்துறைச் சார்ந்த வல்லுநர்களை அழைத்துவந்து கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளோம்.
நான் முன்பே கூறியது போல, என்னுடைய முதல் குறும்படம் காணாமல் போனதுதான் இந்த முயற்சிக்கு தொடக்கப்புள்ளி. ஒரு படம் எடுக்கும்போது நாம் நிறைய உழைப்பைப் போடுகிறோம். ஆனால், அது ஏதோ ஒரு லிங்க்கோடு முடிந்துவிடுகிறது. அதில் பார்வைகள் வருகிறதா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி, நாம் போட்ட உழைப்பிற்கு என்ன பயன் என்ற கேள்வி எழுந்துவிடுகிறது. சினிமா என்பது நாம் மக்களுக்குக் காட்டுவதும், அதிலிருந்து மக்கள் தங்களின் பார்வைகளை எடுத்துக்கொள்வதும்தான். அதுவே நடக்காவிட்டால் அதில் எந்தப் பயனும் இல்லை. எங்களுடைய குழுவின் செயல்கள் முழுக்க முழுக்க திரையிடல் மூலம்தான் இயங்கப் போகிறது.

இதில் சிலரை அழைத்து குறும்படங்களைத் திரையிடப் போகிறோம். என்னுடைய முதல் நிகழ்வுக்குப் பிறகு, சிலர் தங்களது படங்களை இதில் திரையிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுடைய படங்களைப் பெற்றுத் திரையிட்டு, அந்தப் படத்தை ஏன் உருவாக்கினார்கள் என்று பேசுவதற்கான ஒரு களத்தை அமைத்துக் கொடுக்கப் போகிறோம். இப்போதைக்கு இதை ஓடிடி தளமாக மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. ஆனால், ஒரு தயாரிப்பு நிறுவனமாக மாற்றும் எண்ணம் இருக்கிறது. தற்போதைக்கு இதை ஒரு குழுவாக கொண்டுசெல்லவே விரும்புகிறேன். செப்டம்பர் 6-ஆம் தேதி நடந்த எங்கள் முதல் நிகழ்வுக்கு நான் எதிர்பார்த்ததை விட மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. ஏறத்தாழ 75 பேர் கலந்துகொண்டதால் இடமே நிறைந்துவிட்டது. அந்நிகழ்வில், என் தோழியும் தேவயாணி மேடமின் மகளான இனியா ராஜ்குமாரின் பஞ்சுமிட்டாய் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, பானா காத்தாடி படத்தின் இயக்குநரான என் தந்தை இது தொடர்பாக நிறைய விஷயங்கள் சொன்னார். இந்த முயற்சிக்கு முதல் விதையிட்டதே அவர்தான். அவர் நினைத்திருந்தால் இதைத் தடுத்திருக்கலாம்; ஆனால், "நன்றாகச் செய்வோம்" என்று ஊக்குவித்துத் தொடங்குவதற்குக் காரணமாக இருந்தார். அவருக்கும் சிறு வயதில் இதுபோன்ற ஒரு குழுவை உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், அதை நான் செய்வதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் கூறினார். எனக்கு இதில் லாபம் ஈட்டுவது முக்கியமல்ல. திரைப்பட உருவாக்கத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே என் நோக்கம். மக்கள் ஒருவரையொருவர் சந்தித்து, கலந்துரையாடி, திரைப்படங்களை உருவாக்க இது ஒரு நல்ல தளமாக அமையும்.

நான் எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரியில் பி.எஸ்சி விஸ்காம் (முடித்துவிட்டு, தற்போது லயோலா கல்லூரியில் எம்.எஸ்சி விஸ்காம் படித்துக்கொண்டிருக்கிறேன். சில குறும்படங்களை இயக்கியுள்ளேன். இதுதவிர சில டிஜிட்டல் ஊடகங்களில் பயிற்சி பெற்றிருக்கிறேன். தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன், எதிர்காலத்தில் ஒரு திரைப்பட இயக்குநராக உருவெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்." எனப் பகிர்ந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


