பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்; 3-வது நாளாக நீடிப்பு!
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய முழு பயிர்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சி மாவட்டம், சமயபுரம் பள்ளிவிடை பாலம் சர்வீஸ் சாலை அருகே விவசாயிகள் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். இதில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், உழவர் உரிமை இயக்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்பட 40 விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்நாள் போராட்டம் தொடங்கிய நிலையில், அமைச்சர்கள் காந்திராஜ், வினோத், ரமேஷ் ஆகியோரும், கூட்டுறவு பதிவாளர் மற்றும் ஆட்சியர் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால், விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று இரண்டாம் நாள் போராட்டத்தை தொடர்ந்தவர்கள், இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், விவசாயிகள் இரவு பகலாக அங்கேயே முகாமிட்டு உள்ளனர். நாளை விவசாயிகள் குழு சென்னை சென்று இது சம்பந்தமாக அமைச்சர்களோடு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. தங்கள் கோரிக்கையை முழுமையாக அரசு நிறைவேற்றும் வரையில், போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


