கான்ஃபெரன்ஸ் காலில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம்: உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட மனோஜ் ஜராங்கே
மகாராஷ்டிராவில் பெரும்பான்மையாக வாழும் மராத்தா சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி அடிக்கடி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் மனோஜ் ஜராங்கே, மீண்டும் கடந்த 20 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். மாநில அரசு இட ஒதுக்கீடு தொடர்பான பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேறிவிட்ட நிலையில், சில கோரிக்கைகள் மட்டும் சட்டச் சிக்கல் காரணமாக நிறைவேறாமல் இருந்தது.
இதற்காக மும்பை வந்து ஆசாத் மைதானத்தில் போராட்டம் நடத்தப் போவதாக மனோஜ் ஜராங்கே குறிப்பிட்டு இருந்தார். அதோடு தனது ஆதரவாளர்கள் சிலருடன் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தார். தற்போது மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நடப்பதால் மும்பையில் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி கொடுக்க முடியாது என்று கூறிவிட்டனர். ஆனாலும் மனோஜ் ஜராங்கே மும்பை வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் சர்வதேச விண்வெளி மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரிஸ் சென்றிருந்த மகாராஷ்டிர தொழில்துறை அமைச்சர் உதய் சாமந்த், முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஜராங்கே பாட்டீலின் கூட்டாளிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. போன் மூலம் பல சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அமைச்சர் உதய் சாமந்த், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் 7 முறை பேசினார். அதைத் தொடர்ந்து முதல்வர், அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மற்றும் பாஜக தலைவர் பிரசாத் லாட் ஆகியோரை உள்ளடக்கிய கான்ஃபெரன்ஸ் போன் கால் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் ஜராங்கே பாட்டீலின் நிலுவையில் உள்ள கோரிக்கைகள், அத்தகைய எதிர்ப்பை எதிர்கொள்வதற்கான எதிர்கால உத்தி மற்றும் நிலவும் சூழ்நிலையை எவ்வாறு அமைதியாக கையாள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஜராங்கே பாட்டீலின் நெருங்கிய கூட்டாளிகளுடனும் அரசாங்கம் நேரடித் தொடர்பை ஏற்படுத்தியது. இந்த உரையாடலின் போது நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து 20 நாள்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மனோஜ் ஜராங்கே அறிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


