மகாராஷ்டிரா: கையில் குழந்தை; தோளின் மீது விழுந்த பாம்பு; அருவியில் அலறிய மக்கள்! | video

அருவியில் குளிக்கவும், இயற்கையை ரசிக்கவும் சென்ற இடத்தில் திடீரென பாம்பு ஒன்று மேலிருந்து விழுந்தால் எப்படி இருக்கும்? அதுவும் கையில் குழந்தையை வைத்திருக்கும் ஒருவரின் தோளிலேயே விழுந்தால்?

மகாராஷ்டிராவின் அம்போலி அருவியில் இப்படியொரு சம்பவம்தான் நடந்திருக்கிறது. குடும்பத்துடன் அருவிக்கு வந்திருந்த ஒருவர், சிறு குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு வழுக்கலான பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, மேலே இருந்த பாறைப் பகுதியில் இருந்து பெரிய பாம்பு ஒன்று திடீரென அவரது தோளில் விழுந்தது.

அடுத்த சில நொடிகளில் அங்கு இருந்தவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குழந்தையை வைத்திருந்த அந்த நபரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். ஆனால், அவரது தோளில் இருந்த பாம்பு உடனடியாக கீழே விழுந்து, அருகில் இருந்த பாறை இடுக்குக்குள் புகுந்துவிட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்ந்து சென்றது.

இந்தக் காட்சியை அங்கிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார். பாம்பைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியபடி அந்த இடத்தைவிட்டு விலகுவது வீடியோவில் தெரிகிறது. அப்போது ஒருவர், “இது மிகப் பெரிய பாம்பு... இது Cobra” என்று கூறுகிறார். ஆனால், அந்தப் பாம்பு எந்த வகையைச் சேர்ந்தது என்பது சரியாக தெரியவில்லை.

சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சஹ்யாத்ரி மலைத் தொடரில் அமைந்துள்ள அம்போலி அருவி, மழைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் இடமாகும். இந்தச் சம்பவம், அருவிப் பகுதிகளில் சுற்றுலா செல்லும்போது பாறை இடுக்குகள், அடர்ந்த தாவரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியதை உணர்த்துகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.