சுஷாந்த் சிங் மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கு: அவரை எனக்கு தெரியாது - ஆதித்ய தாக்கரே திட்டவட்டம்
மும்பையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவரிடம் மேலாளராக இருந்த திஷா சாலியன் அதே ஆண்டு ஜூன் 8ம் தேதி மும்பை புறநகரான மலாடில் 14 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கீழே தள்ளிவிட்டு கொலை செய்தார்களா என்ற மர்மம் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது. போலீஸார் இது குறித்து விபத்து மரணமாகவே பதிவு செய்துள்ளனர். ஆனால் தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்று திஷா சாலியனின் தந்தை தொடர்ந்து கூறி வருகிறார்.
இது குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் திஷா சாலியன் தந்தை மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் இது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் திஷா சாலியன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. இம்மரணம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
அதில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
தனது பெயரைக் களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தனது பெயர் இவ்வழக்கில் திட்டமிட்டு சேர்க்கப்பட்டு இருப்பதாக ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திஷா சாலியனைத் தான் ஒருபோதும் சந்தித்ததோ அல்லது அவரைப் பற்றி அறிந்ததோ இல்லை. அரசியல் மற்றும் தனிப்பட்ட உள்நோக்கம் கொண்டவர்கள், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடனேயே தன்னை இந்த வழக்கோடு தொடர்புபடுத்துகின்றனர்.
மீண்டும் ஒருமுறை, தேவையற்ற சத்தங்களைக் கடந்து உண்மைகளைப் பற்றிப் பேசுவோம். நான் திஷா சாலியனைச் சந்தித்ததோ அல்லது அறிந்ததோ இல்லை.
கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக, தெளிவான அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களைக் கொண்ட சிலரால், இந்தத் துயரமான வழக்கோடு என் பெயரைத் தொடர்ந்து தொடர்புபடுத்துவது, ஆதாரமற்ற, திட்டமிட்ட அவதூறுப் பிரசாரமாகும். ஒரு துளி ஆதாரமும் உண்மையும் இல்லாமல், சுயநல சக்திகளால் நடத்தப்படும் இந்த இடைவிடாத அவதூறுப் பிரசாரம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
ஆரவாரமான தொலைக்காட்சி விவாதங்களும் ஊடக விசாரணைகளும் உண்மைகளை மாற்றிவிடாது. உண்மைக்காகவும் சக குடிமக்களுக்காகவும் நாங்கள் போராடுவதைத் தடுக்க, இத்தகைய தீய முயற்சிகள் அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு தோல்வியடைந்த உத்தியாகும். நாங்கள் எப்போதும் உண்மையின் பக்கம் நின்று அதற்காகப் போராடுவோம்," என்று அவர் கூறினார்.
திஷாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் திங்கள்கிழமை பதிவு செய்யப்பட்ட சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில் எந்தவொரு சந்தேக நபரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், ஆதித்ய தாக்கரே மற்றும் நடிகர்கள் டினோ மோரியா, ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரின் பங்களிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


