கணக்கு போட்டு காத்திருக்கும் கழகங்கள்! - இடைத்தேர்தலில் பாமக-வின் ஆதரவு யாருக்கு?
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. பெரிய கட்சிகள் அத்தனையும் தங்களின் நிலைப்பாட்டை அறிவித்துவிட்ட நிலையில், பாமக இன்னும் அமைதி காக்கிறது. நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. பாமகவின் ஆதரவை தவெக, திமுக, அதிமுக என மூன்று கழகங்களுமே எதிர்பார்க்கின்றனர். யார் பக்கம் சாயப்போகிறது பாமக?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இருந்தது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தங்களது கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு கேட்டிருந்தார். நாளை வேட்புமனு தாக்கல் முடிவடைய இருக்கும் நிலையில் பாமக இன்னும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
இதுதொடர்பாக நம்மிடையே பேசிய அரசியல் விமர்சகர்கள் சிலர், ``பாமகவை பொறுத்தவரைக்கும் அதிமுக கூட்டணி அவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. மேலும், ஆளுங்கட்சியான தவெக தரப்பிலிருந்தும் பிரதான எதிர்க்கட்சியான திமுக தரப்பிலிருந்தும் அவர்களை சிவப்புக் கம்பளம் விரித்து அழைக்கின்றனர்.

தவெக அரசின் சில திட்டங்களை அன்புமணி விமர்சித்திருந்தாலும் தவெக தலைமையோடு நெருக்கமாகத்தான் இருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் உட்பட தவெகவின் முக்கிய அமைச்சர்கள் அன்புமணிக்கும் சௌமியாவுக்கும் ஏகத்துக்கும் மரியாதை கொடுத்து வருகின்றனர். மெஜாரிட்டி இல்லை என்பதால் விசிக எதாவது பஞ்சாயத்தைக் கூட்டினால் பாமக தங்களுக்கு உதவியாக வந்து நிற்கும் என முதல்வர் விஜய் நம்புகிறார். அதேமாதிரி, திமுகவும் பாமகவும் ஏற்கெனவே கூட்டணியிலிருந்த கட்சிகள்தான்.
விசிக திமுகவுடன் இருந்த வரை பாமக-வால் திமுகவை நெருங்க முடியவில்லை. இப்போது விசிக திமுக-வோடு இல்லை. திமுக-வுக்கும் வடமாவட்ட அரசியலை கைக்குள் வைக்க பாமக தங்களோடு நிற்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் மூன்று கழகங்களும் பாமக-வை இழுக்க நினைப்பதற்கு இன்னொரு லாஜிக்கும் இருக்கிறது. மதுராந்தகம் தொகுதியில் வன்னியர்களின் வாக்கு கணிசமாக இருக்கிறது. பாமக தனியாக நின்றாலே 10% வாக்குகளை எடுக்க முடியும். கடந்த 2021, 2026 தேர்தல்களில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேல் வென்றதற்கு பாமக-வுடனான கூட்டணியும் முக்கிய காரணமாக இருந்தது. சமீபத்தில் முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைக்கும் விசிலுக்கும் 7000 வாக்குகள்தான் வித்தியாசம் இருந்தது.
மூன்றாவது இடம்பிடித்த திமுக-வும் மோசமில்லை. இரட்டை இலைக்கும் உதயசூரியனுக்கும் 10,000 வாக்குகள்தான் வித்தியாசம். இந்த 10,000 வாக்குகள் எந்த கட்சிக்கு செல்கிறது என்பதை பொறுத்துதான் முடிவுகள் மாறும். அந்த 10,000 வாக்குகளை பாமக-வால் தங்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியுமென மூன்று கழகங்களும் நினைக்கின்றன. திமுக, அதிமுக-வும் பாமக-வின் வெளிப்படையான ஆதரவை கோருகின்றன. ஆனால், விசிக தங்களுடன் இருப்பதால் பாமக இந்தத் தேர்தலில் எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமல் அமைதியாக இருந்தாலே போதுமென தவெக தலைமை நினைக்கிறது. பாமக-வின் அமைதியே தங்களுக்கு சாதகமாக களத்தை திருப்பிவிடும் என நம்புகின்றனர். பாமக-வின் ஆதரவைப் பெற்று மதுராந்தகத்தில் தவெக-வை நெருக்கிவிட்டால், தாராபுரத்தில் தவெக-வை ஒரு கை பார்த்துவிடலாம் என திமுக-வும் அதிமுக-வும் கணக்கு போடுகின்றன. தாராபுரத்தில் தவெக மூன்றாவது இடமே பிடித்திருந்தது. தொகுதிக்குள் சத்யபாமாவுக்கு தவெக-வினர் மந்தமாகத்தான் வேலை செய்கின்றனர். இதையெல்லாம் கணக்கில் வைத்தே பாமக-வை எப்படியாவது தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டுமென திமுக காய் நகர்த்துகிறது" என்றனர்.
கூட்டல் கழித்தல் கணக்கில் யாருக்கு பலம் சேர்க்கப் போகிறார் அன்புமணி?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


