அந்த இடத்திலேயே இறந்திருப்பேன் - இடித்து விட்டு தப்பியதாக கார் டிரைவர் மீது டெல்லி பெண் புகார்
டெல்லி அருகில் உள்ள குர்கான் என்ற இடத்தில் நேற்று இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை காரில் வந்த ஒருவர் விரட்டி சென்றார். ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் வாகனத்தை காரில் வந்தவர் குறுக்கிட்டார். இதனால் அப்பெண் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார்.
இரு சக்கர வாகனத்தை சிறிது தூரம் கார் இழுத்துச்சென்றது. இந்தச் சம்பவத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட காணொலியை அப்பெண் சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.
அது வைரலாக பரவியது. அந்த காணொளியில் தன்னை சியா என்று அறிமுகப்படுத்திக்கொண்ட ஷிவானி சௌஹான், "காலை ஒரு குழுவுடன் குர்கானில் உள்ள தி பைக்கர்ஸ் பார்ன் உணவகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு கார் தன்னைப் பின்தொடரத் தொடங்கியது.
நடந்தது என்ன?
அந்தக் காரில் இருந்தவர்கள் பலமுறை தன்னை நெருங்க முயன்றதாகவும், வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு தன்னிடம் கேட்டனர். நான் அவரிடம் இன்னும் சற்று தூரம் தள்ளி ஓட்டிச் செல்லுமாறு கூறினேன்.
ஆனால் அவரோ பைக்-ஐ நிறுத்து என்று சொன்னார். காரில் இருந்தவர்கள் மதுபோதையில் இருந்திருக்கலாம் என்றுதான் சந்தேகப்பட்டேன். அந்தக் கார் தனது பாதையை மறித்து குறுக்கே வருவதைத் தடுக்கவும், அவர்களுக்கு முன்னால் செல்லவும்தான் வேகத்தை அதிகரித்தேன்.
அந்தக் கார் ஆக்ரோஷமாக அங்கும் இங்கும் நகர்ந்து, எனது இருசக்கர வாகனத்திற்கு முன்னால் குறுக்கே வரத் தொடர்ந்து முயன்றுகொண்டே அருகில் வரவும் முற்பட்டது. அப்போது, எனக்கு பின்னால் வந்துகொண்டிருந்த நண்பர், தனது மோட்டார் சைக்கிளை அந்தக் காருக்கும் எனக்கும் இடையில் செலுத்தி என்னைப் பாதுகாக்க முயன்றார்.
சாலையில் தூக்கி வீசப்பட்டேன்
இறுதியில் அவர் எனது வாகனத்தின் பக்கவாட்டில் மோதினார். அந்த மோதலில் நான் சாலையில் தூக்கி வீசப்பட்டேன். எனது மோட்டார் சைக்கிள் தார்ச் சாலையில் சறுக்கிச் சென்றபோது ஏற்பட்ட உராய்வினால் தீப்பொறிகள் உண்டாது. அந்த கார் அங்கிருந்து தப்பிச்சென்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் காரை ஓட்டிய கல்யாண் பைஸ்லா இது குறித்து கூறுகையில், "22 முதல் 23 பேர் கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகள் அடங்கிய குழு ஒன்று ஆக்ரோஷமாக வாகனம் ஓட்டியதாகவும், எனது காரை அடிக்கடி முந்திச் சென்றும், காரின் முன்பாக வந்து வேகத்தைக் குறைத்தும் இடையூறு செய்தனர். நான் யூ-டர்ன் செய்துகொண்டிருந்தபோது ஷிவானி திடீரெனத் திரும்பியதாகவும், அதனால் விபத்தைத் தவிர்க்கத் எனக்கு மிகக் குறைந்த நேரமே இருந்தது.
கண்ணாடியில் பார்க்காமலேயே அவர் திடீரெனத் தனது வாகனத்தைத் திருப்பினார். என்னால் காரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இருப்பினும், மோதலைத் தவிர்க்க நான் கடுமையாக முயன்றேன்," என்றும் அவர் மேலும் கூறினார்.
ஜோடிக்கப்பட்ட காணொலி
"சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி, தனித்தனி காட்சிகளை ஒன்றிணைத்துத் தொகுக்கப்பட்ட ஒன்று என்றும், அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் போலக் காட்டிக்கொண்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார்கள். நான் வேண்டுமென்றே அவர்கள் மீது மோதவில்லை," என்று அவர் கூறினார்.
அதேசமயம் ஷிவானி சமூக ஊடகத்தில் காணொலி வெளியிட்ட பிறகு கல்யான் பைஸ்லா அளித்திருந்த பேட்டியில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் ஆணா அல்லது பெண்ணா என்பது தனக்குத் தெரியாது என்றும், இச்சம்பவத்தின் ஒரு பக்கம் மட்டுமே காட்டப்பட்டுள்ளது என்றும், ஷிவானியின் ஆண் நண்பர் ஒருவருடன் தொடர்புடைய காணொளிகள் ஏன் வெளியாகவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார். விபத்தில் சிக்கிய அந்தப் பெண்ணைப் பற்றி எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்று அதில் கூறி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஷிவானி வெளியிட்ட காணொலியில், நாங்கள் சாலையில் வாகனத்தின் வேகத்தை அடிக்கடி கூட்டிக் குறைத்துக்கொண்டிருந்ததாக அவர் கூறுகிறார். ஆனால், உண்மையில் யார் யாரை நெருக்கடிக்குள்ளாக்க முயன்றார்கள் என்பதை எனது முழுமையான காணொளி தெளிவாகக் காட்டுகிறது. நாங்கள் அடிக்கடி வேகத்தை அதிகரிப்பதும் குறைப்பதுமாகச் சென்றதாக நீங்கள் கருதினால், அந்தப் பாதை முழுவதும் என்னை ஏன் பின்தொடர்ந்தீர்கள்? நான் ஆணா பெண்ணா என்று தனக்கு தெரியாது என்று அவர் கூறுவதை ஏற்க முடியாது.
அதற்கு சாத்தியமே இல்லை. என் முடியை நீங்கள் பார்த்தீர்கள். எனக்கு அருகில் வந்தீர்கள். சைகைகள் செய்தீர்கள். பைக்கை நிறுத்துமாறு எனக்குக் சைகை செய்தீர்கள். அப்படியிருக்க, அதை ஒரு பெண் ஓட்டிச் சென்றதுகூட உங்களுக்குத் தெரியாது என்று இப்போது சொல்கிறீர்கள், உண்மையிலேயே என் மீது அனுதாப்படுவதாகக் கூறினால், ஏன் சம்பவ இடத்தில் காரை நிறுத்தவில்லை. நான் அந்த இடத்திலேயே இறந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


