அமிதாப் பச்சன் காட்டம்: வலைப்பதிவைத் திரித்து, போலிச் செய்திகளாகக் கூறும் ஊடகங்களுக்கு ஆவேசப் பதில்
இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை அமிதாப் பச்சன். சமூக வலைத்தளங்கள் பிரபலமாவதற்கு முன்பிருந்தே கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடையின்றித் தினமும் நள்ளிரவில் தனது தனிப்பட்ட வலைப்பதிவில் (Blog) வாழ்க்கைத் தருணங்கள், தத்துவங்கள் மற்றும் தொழில் அனுபவங்களை எழுதிவருகிறார்.
அவரைப் பொறுத்தவரை இது அவரது ரசிகர்களுடனான (அவர்களை Extended Family அல்லது EF என்று அன்போடு அழைப்பார்) ஒரு நேரடி உரையாடல் பாலம்.
ஆனால், சமீபகாலமாக ஊடகங்கள் இவரது பதிவுகளிலிருந்து சில வரிகளை மட்டும் பிரித்து எடுத்து, அவற்றுக்குத் தவறான சூழலையும் உள்நோக்கங்களையும் கற்பித்துச் செய்திகளாக்குவது வாடிக்கையாகிவிட்டது.
குடும்ப விவகாரங்கள், ஓய்வு அறிவிப்பு அல்லது உடல்நலம் குறித்த உருவக வரிகளை, ஊடகங்கள் நேரடிப் பரபரப்புச் செய்திகளாகத் திரித்துவிடுகின்றன. இதற்குக் கடுமையான எதிர்வினையாக அவர் எழுதிய பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை வாழ்த்துகளுடன் தொடங்கிய அவரது சமீபத்திய வலைப்பதிவில், ஊடகங்களின் `முந்தித் தரும் அவசரப் போக்கை’ அவர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். "நான் வலைப்பதிவில் எழுதும் வரிகளுக்கு அளிக்கப்படும் விசித்திரமான விளக்கங்களும் திரிபுகளும் சிரிப்பைத் தாண்டிய ஒன்றாக இருக்கின்றன.
ஒவ்வொரு ஊடகமும் `தானே முதலில் செய்தி கொடுக்க வேண்டும்’ என்ற பதற்றத்தில் பொது வெளியில் ஒரு செய்தியை மற்றவர்களை விட முந்தித் தந்து கவனத்தை ஈர்ப்பதில் குறியாக இருக்கிறது. அதன் மூலம் வணிக ரீதியாகப் பயனடைய வேண்டும் என்ற தாகத்தில் உண்மை பின்னுக்குத் தள்ளப்படுகிறது. மொழியின் அர்த்தம் புரியாமல் போகும் போக்கு வேடிக்கையானது.
நடக்காத ஒரு தருணத்திற்கு உயிரூட்டுவது போலக் காட்ட, தேவையில்லாத மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகளையும் பிழைகளையும் சேர்ப்பது நல்ல வணிகமாக இருக்கலாம்; ஆனால் அது உண்மைக்குச் செய்யும் அநீதி.
விலைக்கு வாங்கப்பட்ட உள்ளடக்கம் தன் முதலீட்டை மீட்டெடுக்க வேண்டும். அதுதானே வணிகத்தின் இயல்பு” என ஊடகங்களின் கிளிக்பைட் கலாசாரத்தைக் கிண்டலடித்து, காட்டமாக எழுதியுள்ளார்.

இணைய யுகத்தில் செய்திகளின் துல்லியத்தை விட, யாருக்கு அதிகப் பார்வைகள் கிடைக்கின்றன என்பதே பிரதானமாகிவிட்டது. பல தசாப்தங்களாகத் தனது சிந்தனைகளை வெளிப்படையாகப் பகிர்ந்துவரும் ஒரு மூத்த கலைஞர், தன் எழுத்து, வணிகரீதியாகப் பயன்படுவது குறித்து வெளிப்படுத்திய இந்தப் பதிவு மிகவும் கவனத்துக்குரியது.
லைக்ஸ் & வியூவ்ஸ் தாண்டி ஊடகங்கள் தங்களின் நம்பகத்தன்மையை இழக்காமல் இருக்க, பரபரப்புக்கு அப்பால் உண்மையை அணுக வேண்டும். அதன் மூலமே போலிச் செய்திகள் பரவாமல் இருக்கும். ஒவ்வொரு ஊடகமும் சமூக அறத்துடன் செயல்பட்டால் மட்டுமே நான்காவது தூணாக நிலையாக இருக்கும். இதையே அமிதாப்பும் சுட்டிக் காட்டுகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


