மதுராந்தகம் இடைத்தேர்தல்: வெளியூர் வேட்பாளர்களைக் களமிறக்கிய கழகங்கள்... - பின்னணி என்ன?
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த வேகத்தில், வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றன த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க. மதுராந்தகம் தொகுதிக்கு மூன்று தரப்பும் வெளியூர் ஆட்களை களமிறக்கியிருப்பது, பேசுபொருளாகியுள்ளது!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரகதம் குமரவேல் மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் திருப்போரூர் தொகுதியின் தையூரைச் சேர்ந்தவர். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தையூரிலுள்ள பூத்தில்தான் வாக்குச் செலுத்தியிருக்கிறார். அதேபோல, தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் சென்னை எழும்பூர் தொகுதியில் வசிக்கிறார். எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர், எழும்பூரில்தான் வாக்களித்துவருகிறார். அ.தி.மு.க-வின் வேட்பாளரான கணிதா சம்பத் 2021-ல் செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் செய்யூர் தொகுதியில்தான் வாக்களித்து வருகிறார். எனவே மூன்று வேட்பாளர்களும் மதுராந்தகத்தைச் சார்ந்தவர்களோ அங்கே வசிப்பவர்களோ இல்லை. த.வெ.க-வுக்கு மரகதம் குமரவேலை நிறுத்த வேண்டிய அழுத்தம் இருப்பதால், அவர்களும் மாற்று வேட்பாளர்கள் குறித்து சிந்திக்கவில்லை.
இது குறித்து தி.மு.க, அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். "2001-க்குப் பிறகே அங்கே வெளியூர் நிர்வாகிகள்தான் வென்றிருக்கிறார்கள். அதனால், அந்த தொகுதியில் ஆளுமைகள் என எவரும் உருவாகவில்லை. மேலும் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த வேட்பாளர்களுக்கு ஒருமுறைக்கு மேல் வாய்ப்பு வழங்குவதில்லை என்பதால், மீண்டும் மீண்டும் ஒரே ஆள் மதுராந்தகம் தொகுதியில் நிற்க முடிவதில்லை. 2005-ல் மதுராந்தகத்தார் எனும் மதுராந்தகம் ஆறுமுகம் மறைவுக்குப் பிறகு பெரிய ஆளுமைகள் யாரும் உருவாகவில்லை. அதனால் மாற்று தொகுதியைச் சார்ந்தவர்களையே களமிறக்குகிறார்கள்" என்றனர்.

நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள், "பொதுவாகவே `தனித்தொகுதிகளி்ல் ஒருவர் வெற்றிபெற்றால், அந்த தொகுதியில் தனி ஆதிக்கம் செலுத்திவிடுவார்’ எனக் கருத்து உண்டு. இதன் காரணமாகவே தனித்தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளருக்கு, தி.மு.க-விலுள்ள இதர சாதியினரே சில சமயங்களில் ஓட்டுப்போடுவதில்லை, வேலையும் பார்ப்பதில்லை. தனித் தொகுதிகளை கூட்டணிக்கு தள்ளிவிடுவதிலேயே குறியாக இருப்பதும் உண்டு. 2011 சட்டமன்றத் தேர்தல் மூலம் தனித் தொகுதியானது மதுராந்தகம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகத்தைச் சார்ந்த அமுலு பொன்மலர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் வெற்றிக்கு முழு ஒத்துழைப்புடன் நிர்வாகிகள் பணியாற்றவில்லை. 10 ஆயிரம் வாக்குகளில் வெற்றியை தவறவிட்டார். அதேநேரம், வெளியூர் வேட்பாளரை நிறுத்தினால் உள்ளூர் கட்சிப் பொறுப்பு பெற முடியாது.

உதாரணமாக பரந்தாமன் மதுராந்தகத்தில் வென்றாலுமே மாவட்டச் செயலாளர் பொறுப்பைப் பெற முடியாது. 2005 வரை உயிருடன் இருந்த மதுராந்தகம் ஆறுமுகம் தி.மு.க-விலும் ம.தி.மு.க-விலும் ஆளுமையாக இருந்திருக்கிறார். அதற்கு பிறகு மதுராந்தகம் தொகுதியில் ஆளுமை மிக்கவர்கள் உருவாகவில்லை என்பதிலிருந்தே அதன் காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


