புதின் முயற்சி, தென்னாப்பிரிக்கா என்ட்ரி, மன்மோகன் சிங் யோசனை - BRICS கதையைப் பகிர்ந்த காங்கிரஸ்

வருகிற செப்டம்பர் 12, 13 தேதிகளில், BRICS மாநாடு புதுடெல்லியில் நடக்கவிருக்கிறது. இந்த ஆண்டு மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது.

இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல நாடுகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்துகொள்வதால், இந்த மாநாடு முக்கியமாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில் பிரிக்ஸ் உருவான வரலாற்றை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்புப் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

BRICS - பிரிக்ஸ்

BRICS - பெயர் எப்படி உருவானது?

“இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2001-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ‘கோல்ட்மேன் சாக்ஸ்’ முதலீட்டு வங்கியிலிருந்த பிரிட்டன் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ’நீல், ‘பில்டிங் பெட்டர் குளோபல் எகனாமிக் பிரிக்ஸ்’ என்ற தனது புகழ்பெற்ற ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்கள், இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் உலகப் பொருளாதாரத்தில் கூட்டாக ஆதிக்கம் செலுத்தும் என்பதைக் குறிக்க, அவற்றின் முதல் எழுத்துக்களை இணைத்து ‘BRIC’ என்ற புதிய சொல்லை அவர்தான் உருவாக்கினார்.

தென்னாப்பிரிக்கா இணைந்தது!

அதன்பிறகு, பிரதானமாக அதிபர் புதினின் முயற்சியால், 2006-ம் ஆண்டு செப்டம்பரில் நியூயார்க்கில் நடந்த ஐ.நா. கூட்டத்தில் இந்த நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து, தங்களுக்குள் பல்வேறு தொடர்புகளை வளர்த்துக்கொள்ள முடிவெடுத்தனர்.

முதலாவது ‘பிரிக்’ உச்சி மாநாடு 2009 ஜூன் மாதம் ரஷ்யாவின் எகதெரின்பர்க் நகரில் நடைபெற்றது. இதில் அப்போதைய இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார்.

பின்னர், 2010-ம் ஆண்டு செப்டம்பரில் தென்னாப்பிரிக்கா இணைந்ததைத் தொடர்ந்து ‘பிரிக்’ என்பது ‘பிரிக்ஸ்’ (BRICS) ஆக மாறியது. தொடர்ந்து, 2024-இல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும், அதற்கு அடுத்த ஆண்டில் இந்தோனேசியாவும் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்தன.

மன்மோகன் சிங் யோசனை

இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் மாறும். இந்தியா முதன்முதலில் 2012-ம் ஆண்டு மார்ச் 29 அன்று புதுடெல்லியில் இந்த உச்சி மாநாட்டை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில்தான் ‘பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கி’ என்ற யோசனையை டாக்டர் மன்மோகன் சிங் முன்வைத்தார்.

இந்த அமைப்பு 2014-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ‘புதிய மேம்பாட்டு வங்கி’ என்ற பெயரில் ஷாங்காயைத் தலைமையகமாகக் கொண்டு உதயமானது.

புகழ்பெற்ற வங்கி அதிகாரியான கே.வி. காமத் இதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார். அதன்பிறகு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக NDB வங்கியிடமிருந்து இந்தியா இதுவரை சுமார் 10 பில்லியன் டாலர்கள் கடனாகப் பெற்றுள்ளது.”

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.