நடிப்பைக் கைவிட நினைத்த என்னை அவர்தான் சமாதானப்படுத்தினார் - நினைவுகளைப் பகிர்ந்த நடிகை சமந்தா
நடிகை சமந்தா ருத்ரபிரபு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவைத் திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டார். தற்போது அவர் இயக்குநர் ராஜ் நிடிமோரு என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர் தனது இரண்டாவது திருமணத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு ஆண்டு சமந்தா நடிக்காமல் இருந்தார்.
இந்தக் காலக்கட்டத்தில் அவர் தனது நடிப்பைக் கைவிடவும் ஆலோசித்துள்ளார். இது குறித்து சமந்தா அண்மையில் நடைபெற்ற உரையாடல் ஒன்றில், அந்தக்காலக்கட்டத்தைத் தான் எப்படிக் கடந்து வந்தேன் என்பதைப் பற்றி சமந்தா பகிர்ந்துகொண்டார்.
அவர் தனது பேட்டியில், ஓராண்டு காலம் நான் ஓய்வு எடுத்தபோது, வேறு சில விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அதே சமயம் எனக்குச் சற்று பயமாகவும் இருந்தது. உடல்நலனைக் கருத்தில் கொண்டு, சற்று நிதானமாக இருக்குமாறும், வேறு ஏதேனும் பணிகளில் ஈடுபடுமாறும் எனக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த ஆலோசனையை நான் தீவிரமாக எடுத்துக்கொண்டேன்.
எனக்கு உண்மையாகவே நம்பிக்கை இருந்த விஷயங்களைத் தேட முயன்றேன். பல தொழில்களில் முதலீடு செய்தேன். ஒரு தொடர் தொழில்முனைவோராக மாறினேன். இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் எனக்கு ஏற்பட்ட மையோசிடிஸ் எனும் உடல்நலப் பாதிப்புதான்.
இருப்பினும் ராஜ் நிடிமோரு என் மீது நம்பிக்கை வைத்திருந்ததுடன், நான் தனது திரைப்பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் விரும்பினார்.
அந்தக் காலகட்டத்தை நான் மிகவும் ரசித்துக்கொண்டிருந்தேன். அப்போது சிட்டாடல் படப்பிடிப்பில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. அது ஒரு கசப்பான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவரும் எனக்காகக் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. அது மற்றவர்களின் நேரத்தை வீணடிப்பதாகிவிடும். அதனால், மா இன்டி பங்காரம் (Maa Inti Bangaaram) என்ற படத்தை நான் தயாரித்தேன். திரைக்குப் பின்னால் பணியாற்றவே நான் விரும்பினேன். அந்த முடிவை நான் மனதார ஏற்றுக்கொண்டேன்.
ஆனால் ராஜ் வேறுவிதமாக முடிவெடுத்தார். படப்பிடிப்புத் தளத்தில் அவர் உடனிருந்தது எனக்கு மிகுந்த தைரியத்தை அளித்தது. அவருக்கு என் மீது அதிக நம்பிக்கை இருப்பதாகத் தோன்றுகிறது. நான் கிட்டத்தட்ட முயற்சியைக் கைவிடும் நிலையில் இருந்தேன். சிட்டாடல் படக்குழுவினருக்கு ஒரு மின்னஞ்சலும் அனுப்பினேன். ஆனால் அவர்கள் என் மீதான நம்பிக்கையைக் கைவிடவில்லை.
மா இன்டி பங்காரம் படத்தில் நடிக்க சாய் பல்லவியும் மறுத்துவிட்டார். அதனால்தான் நான் அந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்தேன். அந்தக்கதைக்கு நல்ல ஆற்றல் இருப்பதாகவும், அது திரைக்கு வர வேண்டும் என்றும் நான் கருதினேன்," என்றார்.
தனது உடல் நிலை குறித்தும் சமந்தா இதற்கு முன்பு சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதில், மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், தனது பதிவில், "சில மாதங்களுக்கு முன்பு, எனக்கு மையோசிடிஸ் (myositis) எனப்படும் தன்னுடல் தாக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு இதைப் பற்றிப் பகிரலாம் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால், நான் எதிர்பார்த்ததை விட இதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது.
ஒரு நாளைக் கூடதாங்க முடியாது என நினைத்தேன்
நாம் எப்போதும் வலிமையானவர்களாகவே காட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்பதை நான் மெல்ல உணர்ந்து வருகிறேன். இந்த இயலாமை அல்லது பலவீனத்தை ஏற்றுக்கொள்வது என்பது, நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயமாகவே இருக்கிறது. நான் மிக விரைவில் முழுமையாகக் குணமடைவேன் என்று மருத்துவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் கடினமான நாட்களும் இருந்திருக்கின்றன.
இன்னும் ஒரு நாளைக் கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்று தோன்றும் தருணங்களில் கூட, எப்படியோ அந்தத் தருணம் கடந்துவிடுகிறது. குணமடைவதை நோக்கி நான் மேலும் ஒரு நாள் நெருங்கிவிட்டேன் என்பதையே இது குறிக்கிறது என்று நினைக்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். இதுவும் கடந்து போகும்" என்ற வார்த்தைகளுடன் அவர் அந்தப் பதிவை நிறைவு செய்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


