`கணினிப் படிப்புக்கு இங்கு முக்கியத்துவமே கொடுப்பதில்லை- ஆசிரியர்கள் குமுறலும் அமைச்சர் விளக்கமும்!

”தமிழ்நாட்டில் மட்டும்தான் கணினி அறிவியல் பாடமானது ஒதுக்கப்பட்ட பாடமாக இருக்கிறது” என கொந்தளிக்கிறார்கள் கணினி பட்டதாரி ஆசிரியர்கள். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்காக மத்திய அரசானது கணினி அறிவியல் பாடத்திற்கு நிதி ஒதுக்கியும், தமிழக அரசு அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள்.

இது தொடர்பாக கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநிலத் தலைவர் குமரேசனிடம் பேசினோம்:

“இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கணினி பாடமானது முக்கியமானது என மத்தியக் கல்வி அமைச்சகம் ஆய்வு செய்து ‘சமக்ர சிக்ஷா’ (Samagra Shiksha) என்ற திட்டத்தைக் கடந்த 2018-2019-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி அறிவை வளர்க்கவும், தகவல் தொடர்புத் துறை பற்றி பள்ளி வயது முதலே தெரிந்துகொள்ளச் செய்யவுமே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதை மற்ற மாநிலங்கள் அனைத்தும் தங்களது பள்ளிகளில் நடைமுறைப்படுத்திவிட்டன. குறிப்பாக, பக்கத்து மாநிலமான கேரளாவில் கணினி அறிவியலை 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆறாவது பாடமாகக் கட்டாயமாக்கியிருக்கிறார்கள்.

ஆனால், தமிழக அரசானது இதில் இதுவரை எந்த ஆர்வமும் காட்டவில்லை. 2021 முதல் தற்போது வரை கணினி அறிவியலுக்காக மத்திய அரசானது தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ₹400 கோடிக்கும் மேல் ஒதுக்கியும், அதைச் சம்பந்தப்பட்ட பாடத்திற்குப் பயன்படுத்தவில்லை. இல்லம் தேடி கல்வியில் பள்ளிப் படிப்பைக் கூட சரியாக முடிக்காமல் தற்காலிகமாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறையில் தரவுப் பதிவு (Data Entry) செய்பவர்களுக்கும் கடந்த திமுக அரசு ஆட்சியில் இருந்தபோது அந்த நிதியைப் பயன்படுத்தியது.

குமரேசன்

மத்திய அரசு கணினி அறிவியலுக்காக ஒதுக்கிய இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவும் வந்தது. நீதிமன்ற உத்தரவு வந்த பிறகும் அரசே இதை முறைப்படுத்தி கணினிப் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.

தற்போது மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்கள் செய்முறைத் தேர்வின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பயன்படுகின்றனவே தவிர, முழுமையாகக் கணினியைப் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்வதில்லை. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தலைதூக்கியிருக்கும் இந்தக் காலத்தில், கணினியை எப்படிப் பயன்படுத்துவது என்ற சாதாரண விஷயம்கூட கிராமப்புற மாணவர்களுக்குத் தெரியவில்லை.

கல்வியில் தமிழகம்தான் முன்னிலை எனப் பெருமைகொள்ளும் அரசானது இந்த விஷயத்தில் மட்டும் பின்தங்கியே நிற்கிறது. எனவே, மற்ற பாடங்களைத் தனிப் பாடமாகப் கற்பிப்பது போல கணினி அறிவியலையும் சேர்ப்பதோடு, அதற்கான தகுதியான ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்” என்றார் கோரிக்கையாக.

இது குறித்து ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் பால் ஜெயகுமாரிடம் கேட்டோம்:

“பள்ளிப் பருவத்தில் நாம் படிக்கும் எந்த ஒரு படிப்பும் எதிர்காலத்தில் நமக்கு உதவத்தான் போகிறது; அது கணினிப் படிப்பிற்கும் பொருந்தும். மேல்நிலைப் பள்ளிகளில் குறிப்பாகக் கணினி அறிவியலைப் பாடமாக எடுத்துப் படிக்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும்தான் கணினியைப் படிக்க வேண்டும் என்ற தற்போதைய நடைமுறை முற்றிலும் முரணானது. இதில் தமிழ் வழிக் கல்வியை அடிப்படையாகக் கொண்டு படிக்கும் ஏழை மாணவர்களே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ மாணவர்களுக்கு 6-ஆம் வகுப்பு படிக்கும் போதே கணினியை ஒரு பாடமாக வைத்து, அதைப் பற்றிய புரிதலைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

பால் ஜெயகுமார்

ஆனால், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அது எட்டாக்கனியாக இருக்கிறது. இதற்காகத்தான் மத்திய அரசு ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தைக் கொண்டு வந்தது. கிராமப்புற ஏழை மாணவர்கள் கணினி அறிவியலில் மேம்படுவதோடு, பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிகளில் சிறந்து விளங்க கணினி ஒரு அடிப்படைக் கருவியாக இருக்கும் என்பதால் தான் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

இன்றைய தலைமுறைப் பிள்ளைகள் கைப்பேசியிலும் சமூக ஊடகங்களிலும் மூழ்கியிருந்தாலும், அடிப்படையான கணினி விஷயங்கள் தெரியாததால் வேலைக்குச் செல்லும்போது பெரும் சிரமங்களைச் சந்திக்கிறார்கள். எனவே, அரசானது கணினி அறிவியலை ஊக்குவிக்க மத்திய அரசின் இத்தகைய திட்டங்களை அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் செயல்படுத்தித் தர வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

ராஜ்மோகன்
ராஜ்மோகன்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் இது குறித்து விளக்கம் கேட்டோம்:

”கல்வியை ஊக்குவிப்பதும் புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதும்தான் தற்போதைய அரசின் பிரதான குறிக்கோள். கணினி அறிவியல் பாடத்திற்காக மத்திய அரசானது நிதியைப் போதுமான அளவு வழங்கவில்லை. வழங்கப்பட்ட நிதியை இதற்கு முந்தைய அரசு தற்காலிகப் பணியாளர்களுக்கும் ஆய்வகப் பராமரிப்பிற்கும்தான் பயன்படுத்தியது. தற்போதைய ஆண்டிற்கான நிதியைக் கல்வித் துறை சார்பில் கோரியிருக்கிறோம். ஆனால், அந்த நிதி இன்னும் எங்களுக்கு வரவில்லை. எனவே, மத்திய அரசு வழங்கும் நிதியைத் தவறாகப் பயன்படுத்தாமல் நிச்சயமாகச் சம்பந்தப்பட்ட கணினிப் பாடத்திற்கே பயன்படுத்துவோம்” என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.