வத்தலக்குண்டு: ரௌடியைச் சுட்டுப் பிடித்த போலீஸ் - பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள சிக்கனம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (54). சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர்மீது இரட்டை கொலை வழக்கு உட்பட 26 குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பிணையில் வந்துள்ள ரௌடி ராஜா, கொலை வழக்கில் தனக்கு எதிரான சாட்சிகளை மிரட்டுவதாக திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்குப் புகார் வந்தது.
இதனைத் தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார், ரௌடி ராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தேர்தல் வேட்டையில் ரௌடி ராஜா வத்தலகுண்டு அருகே என்.கோவில்பட்டி கிராமம் தோட்டப் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து சப் இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் தலைமையிலான போலீஸார், ரௌடி ராஜாவை சுற்றி வளைத்தபோது ராஜா கைகளில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு போலீஸாரைத் தாக்க முற்பட்டுள்ளார்.
அதில் காயமடைந்த சப் இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத், தற்காத்துக் கொள்ள ரௌடி ராஜா மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் ரௌடி ராஜாவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதனை அடுத்து காயமடைந்த ரௌடி ராஜா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் ஆகியோர் இருவரும் மீக்கப்பட்டு, நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இருவருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு மாவட்டக் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


