`நிர்மல்குமார் எங்களுடன் இருந்த தம்பி; அவரிடம் பேசுவேன்! - நயினார் நாகேந்திரன்

தேனி மாவட்டம் வருஷநாடு, மேகமலைப் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மலை கிராம மக்களை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி , அங்கு குடியிருக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வனத்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மலைவாழ் மக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வருஷநாடு பகுதியில் பாஜக சார்பில் மலைவாழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து "மக்கள் சந்திப்பு" நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு மலைக்கிராம மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது மலைக்கிராம மக்கள் `எங்களது உயிரே போனாலும் கிராமத்தை விட்டு வெளியேற மாட்டோம் என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.  மேலும்  ‘தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினர்

இதில் பாஜக மாநில பொதுசெயலாளர் ராம சீனிவாசன், பேசுகையில், “விவசாயிகள் காப்புக்காடுகளில் புதிதாகக் குடியேறவில்லை; மாறாக, அவர்கள் நீண்டகாலமாக விவசாயம் செய்துவந்த பாரம்பரியப் பகுதிகள் பின்னர் காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேகமலை, வருஷநாடு

நீதிமன்றங்கள் ஆவணங்களின் அடிப்படையிலேயே முடிவெடுக்கும் என்பதால், முறையான சட்டப்பூர்வ நகர்வுகள் அவசியம். உச்ச நீதிமன்றம் இந்த பிரச்சினைக்கு பூட்டு போட்டுள்ளது அதற்கு சாவியும் உள்ளது அதை திறக்க வேண்டும் என்றால் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு  தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த இரண்டு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் தீர்வை திறக்க எட்ட முடியும். உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுகள் மற்றும் அவசர நடவடிக்கைத் தேவையைத் தவிர்க்க, மாநில அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்றார்

பின்னர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “ 2 நாட்களில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யபடும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். ஆனால் இதுவரை சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவில்லை, முதலமைச்சர் விஜயுடன் நாங்கள் எதிரும், புதிருமாக உள்ளோம் ஆனால் மேகமலை விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாக எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் துணை நிற்போம்.

2009 ஆம் ஆண்டு மேகமலை காப்புகாடு என்பதை கையெழுத்திட்டது திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது.  தேனி மாவட்ட ஆட்சியர் கனிவோடு மக்களின் பிரச்சினைகளை தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் மிக பெரிய சேதங்களை தமிழக முதலமைச்சர் சந்திக்க நேரிடும்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

அமைச்சர் நிர்மல்குமாரிடம் போன் செய்து நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறுவேன், எங்களுடன் இருந்த தம்பி என்பதால் நான் அவரிடம் பேசி என்ன உதவி வேண்டுமோ அதை செய்வேன்.

மக்களின் பிரச்சனைகள் தீர்க்க தமிழக அரசுடன் சேர்ந்து உதவ நாங்களும் தயாராக உள்ளோம், நீங்கள் வேறு விதமாக செயல்பட்டால் நாங்களும் வேறு விதமாக செயல்படுவோம் அதற்கு நானே இங்கு வருவேன்” என தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.