என்ன விலை: ``என் நடிப்பை பார்த்து நிமிஷா சஜயன் எனக்கு முத்தம் கொடுத்தாங்க - நடிகர் கருணாஸ்

சஜீவ் பழூர் இயக்கத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் நடித்த ‘என்ன விலை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கருணாஸ், ``25 வருஷத்துக்கு முன்னாடி, 2002-ல் இயக்குனர் பாலா அண்ணன் மூலமாக ‘நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டியாக ராமேஸ்வரத்தில் என்னுடைய படப்பிடிப்பை ஆரம்பித்தேன். இந்த 25 வருடங்களில் நான் அதிகமாக படங்கள் பார்ப்பது மற்றும் செய்திகள் பார்ப்பது என இரண்டை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதில் நான் அதிக அளவில் பார்த்தது மலையாளப் படங்கள்தான்.

என்ன விலை திரைப்படக் குழு

‘காசி’ படத்தில் விக்ரம் சார் நடிப்பதற்கு முன்னாடி, கலாபவன் மணி சார் நடித்த அந்த மூலப் படத்தை நான் தமிழில் நடிப்பதாகச் சில பேச்சுக்கள் இருந்தன. அப்போது நமக்கு சினிமா அவ்வளவாகத் தெரியாததால் நிறைய வாய்ப்புகளை மிஸ் பண்ணிட்டோம். மலையாள டீமுடன் படம் நடிக்க வேண்டும் என்ற என் சினிமா வாழ்க்கையின் 20 ஆண்டு கால ஆசை, 2026-ல் என்ன விலை படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. நான் எப்போதுமே பெரிய நடிகர், சிறிய நடிகர் என்ற பாகுபாட்டுடன் நடித்ததில்லை. இந்த ‘என்ன விலை’ படமும் சாமானியர்களைப் பற்றிய ஒரு படம்தான்.

இதில் நடித்திருக்கக்கூடிய அனைவரையுமே அந்தந்தக் கதாபாத்திரத்திற்குத் தகுதியானவர்களாகவே இயக்குனர் தேர்வு செய்தாரே தவிர, இதில் எந்த நடிகருக்கு மார்க்கெட் இருக்கிறது என்றெல்லாம் பார்க்கவில்லை. என்னை வைத்து 7 கோடி ரூபாய்க்குப் படம் எடுக்கச் சினிமா தெரிந்த யாரும் வரமாட்டார்கள். ஆனால், தயாரிப்பாளர் ஜித்தேஷ் மற்றும் அவரது நண்பர் இருவரும் தைரியமாக முன்வந்து இந்த கதையை நம்பிப் படம் எடுக்க வந்தார்கள். அவர்களிடம் "எனக்கு இங்குப் பெரிய வியாபாரம் கிடையாது. நீங்கள் ஆர்வக் கோளாறில் படம் எடுத்துவிட்டு, கடைசியாகக் கருணாஸை வைத்துப் படம் எடுத்து நஷ்டம் ஆகிவிட்டது என்று என் மீது குற்றம் சொல்லக் கூடாது" என்றேன்.

கருணாஸ்

அதற்குப் பிறகு, "தம்பி, இது உண்மையிலேயே நல்ல கதை. இயக்குனர் சஜீவ் இதில் எழுப்பியுள்ள கேள்வி, இந்திய சினிமாவிலேயே இதுவரை யாருமே கேட்காத ஒரு கேள்வி. அதைப் படம் பார்க்கும்போது நீங்களே உணர்வீர்கள். கதையை நம்பி வந்த நீங்கள் ஏன் வியாபாரத்தைப் பற்றி யோசிக்கிறீர்கள்?" என்று பேசி, மீண்டும் அனைவரையும் ஒன்றிணைத்துச் படப்பிடிப்புக்குச் சென்றோம்.

இயக்குனர் சஜீவ் தனது முதல் படத்தைத் தமிழில் தான் இயக்க வேண்டும் என்று விரும்பியவர். தமிழ் மீது மிகுந்த பற்று கொண்ட மலையாள இயக்குனரான சஜீவ் மற்றும் மலையாளக் குழுவுடன் பணியாற்ற விரும்பிய கருணாஸ் ஆகிய இருவரின் இணைப்பாக இந்தப் படம் அமைந்துள்ளது. இதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நிமிஷா நடித்திருக்கிறார். பிராம்ப்டிங் எதுவுமின்றி சட்டக் குறிப்புகளை மனப்பாடம் செய்து மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். சித்தா படத்திற்குப் பிறகு, இதில் அவரது நடிப்பு உண்மைக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.

நிமிஷா ஷஜயன்
நிமிஷா ஷஜயன்

சினிமாவில் எனது 25 வருடப் பயணத்தில், என் மனைவி எனது நடிப்பைப் பாராட்டிய முதல் படம் இதுதான். "கருணா, உனக்கு இந்தப் படத்தில் ஒரு மிகப்பெரிய மரியாதை கிடைக்கும்" என்று கூறினார். நடிகை நிமிஷா ஒரு காட்சியில் என் நடிப்பை பார்த்துவிட்டு கண்ணத்தில் முத்தமிட்டார். மூத்த நடிகை பூர்ணிமா ஜெயராம் அவர்களும் எனது நடிப்பை நெகிழ்ந்து பாராட்டியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது. முன்பு நான் நடித்த போகும் இடம் வெகு தூரமில்லை திரைப்படம் திரையரங்குகளில் சரியான கவனம் பெறாவிட்டாலும், அமேசான் ஓடிடியில் வந்த பிறகு அனைவரும் கொண்டாடினார்கள்.

அந்தப் படம் கொடுத்த தைரியத்தில்தான் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினேன். அதேபோல், இந்த படத்தின் தவசிமுத்து என்ற கதாபாத்திரமும் ஒவ்வொரு வீட்டிற்கும் போய் சேர்வான் என்று நம்புகிறேன். நீங்கள் படத்தை பார்த்துவிட்டு எதுவாக இருந்தாலும் விமர்சியுங்கள், இரண்டையும் ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்." என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.