முதல்வர் விஜய் உரை: கலைஞர் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சம் புரிகிறது - தங்கம் தென்னரசு
முதல்வர் விஜய்யின் சட்டமன்ற உரையை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்குச் சீரழிந்திருக்கிறது என்பதற்கு, நாள்தோறும் வெளியாகும் கொலை மற்றும் குற்றச் செய்திகள் போதுமான சாட்சியாக இருக்கின்றன.
மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிப்பதுதான் ஒரு அரசின் அடிப்படைக் கடமை. ஆனால், குற்றங்களைத் தடுப்பதற்கும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பதிலாக, எதிர்க்கட்சியைத் தாக்குவதற்கான வசனங்களைத் தயாரிப்பதிலேயே இந்த அரசும் முதலமைச்சரும் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது.
சட்டம்–ஒழுங்கு குறித்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நேரத்தில், பழைய அவதூறுகளைத் தூசிதட்டி எடுப்பது, இன்றைய தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகத்தான் பார்க்கப்படுகிறது.
தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர் மீது வீசப்பட்ட அதே பழைய அவதூறுகளை, இன்று அரசியலுக்கு வந்துள்ள புதியவர்களும் பயந்து கையில் எடுக்கிறார்கள் என்றால், கலைஞர் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
எங்கள் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கழகத்திற்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் மிசா சிறைக்கொடுமையைத் துணிச்சலுடன் எதிர்கொண்டவர்.

ஜனநாயகம் என்றால் என்ன என்பதைத் தனது போராட்ட வரலாற்றால் நிரூபித்த இயக்கம் தி.மு.க. ஆனால், இன்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி அவர்கள் எங்கே அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தி எதிர்வினையாற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவருடன் நேரடியான விவாதத்தையே தவிர்க்கும் அளவுக்கு ஜனநாயகம் பாதாளத்திற்குப் போய் விட்டது" என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


