மெதுவா படிக்கிறது தப்பா? - குழந்தையின் தாய் புகார்; மறுக்கும் ஆசிரியை; மௌனத்தில் பள்ளி நிர்வாகம்
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்தில் உள்ள இடைக்கல் என்ற கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு குழந்தை மிகவும் பொறுமையாகப் படிப்பதால் அந்தக் குழந்தையின் படிப்பை நிறுத்த ஒரு பள்ளி நிர்வாகம் முயல்கிறது என்று ஒரு காணொளி வெளியானது.
அந்தக் காணொளி பதிவிட்ட குழந்தையின் தாயாரிடம் விசாரித்த போது, "எனக்கு இரண்டு மகள்கள், முதல் மகள் மூன்றாவது வகுப்பும் இரண்டாம் மகள் ஒன்றாம் வகுப்பும் படிக்கிறார்கள். போன புதன்கிழமை முதல் மகளுக்கு பள்ளியில் தேர்வு வைத்துள்ளனர்.
அவள் அதை முழுமையாக எழுதவில்லை என்று என்னிடம் வீட்டிற்கு வந்து கூறினாள். அதைக் குறித்து அவளின் பள்ளி ஆசிரியரிடம் விசாரித்த பொழுது, அந்த ஆசிரியர், எனது மகள் மிகவும் பொறுமையாகப் படிக்கின்றாள்.
மேலும் வரும் மூன்றாவது பாடம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அதைப் படிக்கும் தகுதி என் மகளுக்கு இல்லை என்றும் கூறி விட்டார்.
எனது மகளை இவ்வளவு தரம் தாழ்த்தி கூறுகிறார்களே என்று, இது குறித்து அந்தப் பள்ளியின் மேலாளரிடம் இவரைப் பற்றி புகார் கூறச் சென்றோம்.
முதலில் அந்த ஆசிரியர் மீது புகார் கடிதம் கொடுக்கச் சொன்னார். பின்னர் புகார் கடிதம் பெற்ற சிறிது நேரத்திலேயே எங்களை நோக்கி சத்தம் போட்டு, “உங்கள் மகள் இந்தப் பள்ளியில் படிக்க தகுதியில்லை. அதனால் அவளுக்கு வேண்டுமானால் மாற்றுச்சான்றிதழ் (T.C) வழங்குகிறோம். பெற்றுச்செல்லுங்கள்" என்று கூறிவிட்டு மேலும், "எங்கு சென்று புகார் அளிக்கிறீர்களோ அளியுங்கள்" என்று கூறி எங்களைச் சத்தம் போட்டு பள்ளியில் இருந்து அனுப்பிவிட்டார்.
மேலும் எனது மகள் சற்று மெதுவாகப் பயிலக்கூடியவள். ஆனால் அந்த ஆசிரியருக்கு எனது மகள் இன்ஸ்டாகிராமில் காணொளிகள் போடுவது பிடிக்கவில்லை. அதனால்தான் இவ்வாறு செய்கிறார்" என்று கூறினார்.
மேலும் இது குறித்து அந்தப் புகார் கூறிய ஆசிரியரிடம் கேட்ட பொழுது, “நான் பள்ளியில் மூத்த ஆசிரியையாய் உள்ளேன். எல்லா மாணவர்களும் எங்களுக்கு ஒரேமாதிரிதான். மேலும் அன்று வைத்த தேர்வில் அந்தக் குழந்தை எழுதாததை வீட்டுப் பாடமாக எழுதி வரச்சொன்னேன்.
அப்படி எழுத முடியவில்லை என்றால் நாளை பள்ளியில் எழுதிக்கொள்ளலாம் என்று கூறி அனுப்பிவிட்டேன். அதன்பிறகு அந்தக் குழந்தையின் பெற்றோர் இரவு நேரத்தில் என்னைத் தொடர்புகொண்டு கேட்ட பொழுதும் கூட நான் வேறு மாணவர் எழுதிய விடையை வாங்கி அனுப்பினேன்.
மேலும் அவர்கள் என்னிடம் குழந்தைகளைச் சரியாகப் பார்க்கமாட்டீர்களா? என்ன ஆசிரியர் நீங்கள் என்று கூறி சண்டைக்கு வந்தார்கள். மேலும் அந்தக் குழந்தை தற்பொழுதுதான் நன்றாகப் பயின்று வருகின்றது.
மேலும் அடுத்த நாள் அவர்கள் பள்ளிக்கு வந்து நிர்வாகத்திடம் சண்டை போட்டுக்கொண்டு குழந்தையை அழைத்துச் சென்று உள்ளார்கள்.
குழந்தையும் எதுவும் புரியாமல் வகுப்பில் இருந்து சென்றது" என்று கூறினார்.

மேலும் இது குறித்து அந்தப் பள்ளியின் மேலாளரை விசாரித்த பொழுது, "நாங்கள் இது சமந்தமாக மாவட்ட கல்வி அலுவலரிடம் தகவல் கூறிவிட்டோம். எனவே எந்தத் தகவலும் எங்களால் வழங்க இயலாது" என்று கூறி அழைப்பை வைத்துவிட்டார்.
இந்த விவகாரம் குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) உரிய விசாரணை நடத்தி, அந்தச் சிறுமியின் கல்வி பாதிக்கப்படாத வண்ணம் அவர் மீண்டும் தொடர்ந்து படிக்க வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


