Bigg Boss Tamil 10: என்னோட அந்தப் பக்கத்தை மக்கள் பெருசா பார்த்ததில்ல - குமரன் பேட்டி | Exclusive

விஜய் டிவியில் ̀பிக்பாஸ் தமிழ் சீசன் 10 கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பும் பொறுப்பை முதன்முறையாக பார்வையாளர்களிடம் கொடுத்துள்ளனர்.

என்ட்ரியாகும் மேடையிலேயே சிலர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் போட்டியாளர்களின் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்களுள் ஒருவர் நடிகர் குமரன்.

 ̀பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமானவர்.  ̀கதிர் கதாபாத்திரத்தின் மூலம் பரிச்சயமான இவர் பின் வெள்ளித்திரையிலும் தடம் பதித்தார்.

இவர் கதாநாயகனாக நடித்த  ̀குமார சம்பவம் படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. வதந்தி வெப் சீரிஸில் இவருடைய நடிப்புக்குப் பலர் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இவர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார். 

kumaran

அவரிடம் பேசினோம். " ̀பிக்பாஸ் டீம்ல இருந்து கூப்டப்ப ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஒரு பெரிய ஸ்டேஜூக்குப் போகப் போறோம் என்கிற பயமும் இருந்துச்சு.

ஒரு பெரிய ஸ்டேஜ்ல இப்ப இருக்கிறதுல ரொம்பவே சந்தோஷம். இந்த ஷோவுக்கு காமன்மேன்ல இருந்தும் போட்டியாளர்கள் வராங்கன்னு சொன்னாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் நானும் ஒரு காமன்மேன்தான். எப்படி அவங்க பலகட்ட போட்டிக்குப் பிறகு இங்க வந்திருக்காங்களோ அப்படித்தான் நானும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகிட்டு அது மூலமா இப்ப இந்த இடத்துல இருக்கேன்.

அதனால அவங்க நம்ம கூட போட்டி போடப் போறாங்க என்கிற பயமெல்லாம் இல்ல. புது மனிதர்களைச் சந்திக்கப் போறோம் என்கிற சந்தோஷம் இருக்கு. 

எனக்கு சாண்டி பிரதர் மாதிரி ஒருத்தர் கூட அந்த வீட்ல இருந்தா ஜாலியா இருக்கும்னு தோணியிருக்கு. அதுமாதிரி வீட்ல யாராச்சும் இருந்தாங்கன்னா கண்டிப்பா உடனே செட் ஆகிடுவேன். அதே மாதிரி ரொம்ப புறணி பேசுறவங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது. அவங்க கூட ஜெல் ஆக மாட்டேன்.

kumaran
kumaran

7 வருஷம் விஜய் டிவியோட என் டிராவல் இருந்திருக்கு. ரியாலிட்டி ஷோவாக இருக்கட்டும், சீரியலாக இருக்கட்டும் என்னை அவங்க வீட்டுப் பையனா பார்த்திருக்காங்க. அவங்க முகம் சுளிக்கிற அளவுக்குக் கண்டிப்பா நான் நடந்துக்க மாட்டேன்.

அவங்களை நம்பிதான் வீட்டுக்குள்ள போறேன். நான் ஓப்பனா ஃபன்னா பேச கொஞ்சம் டைம் எடுத்துப்பேன். ஆனா, வீட்டுக்குள்ள போனதும் அதை ஆடியன்ஸுக்குக் காட்டணும். என்னோட அந்தப் பக்கத்தை மக்கள் இன்னும் பெருசா பார்த்ததில்ல!" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.