``தவெக-வுக்கு காங்கிரஸால் எந்த நேரத்திலும் ஆபத்துதான் - எச்சரிக்கும் ராஜேந்திர பாலாஜி
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ``உலகத் தலைவர்கள் அனைவரும் போற்றும் வகையில் ஒரு மிகச் சிறந்த பிரதமராக மோடி திகழ்கிறார். அவருக்கு இணையான ஒரு தலைவரோ, அவர் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்நோக்கும் துணிச்சலோ இந்தியாவில் உள்ள வேறு எந்தக் கட்சியின் தலைவருக்கும் கிடையாது.
அமெரிக்க அதிபர் போன்ற வல்லரசுத் தலைவர்களும் அவருடன் கலந்துபேச விரும்பும் வகையில், வலுவான கூட்டணியோடு உலகளவில் வியக்கத்தக்க ஆட்சியை அவர் வழங்கி வருகிறார்.
ஒவ்வொரு நடிகரின் ரசிகர்களும் தங்கள் தலைவரை முதலமைச்சராகவோ, பிரதமராகவோ அல்லது குடியரசுத் தலைவராகவோ கற்பனை செய்து பார்ப்பது வழக்கம். அதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த வகையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அவர் முதலமைச்சர் ஆகிவிட்டார்.
அடுத்து பிரதமர் என்றும் கற்பனை செய்கிறார்கள். ஆனால், அந்த நிலையை எட்டுவதற்கு எத்தனை படிகளைக் கடக்க வேண்டும், எத்தனை சிக்கல்களைச் சந்திக்க வேண்டும் என்ற நடைமுறை உண்மைகளை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தவெக மற்றும் காங்கிரஸ் இடையே அமைந்திருக்கும் கூட்டணி என்பது பொருத்தமில்லாத, ‘மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டது போன்ற’ ஒரு கூட்டணியாகும். இந்த ஆட்சி சூழ்நிலையால் உருவானதே தவிர, தனிப் பெரும்பான்மையுடன் அமைந்த நிலையான ஆட்சி கிடையாது.
எனவே, பல்வேறு ஆபத்துகள் சூழ்ந்திருக்கும் இந்த ஆட்சி மற்றும் கூட்டணி எந்த நேரத்திலும் கவிழ்ந்துவிடக்கூடும் என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். தவெக-வுக்கு காங்கிரஸால் எந்த நேரத்திலும் ஆபத்துதான்" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


