Miss World 2026: மகுடம் சூடிய ஜோஹைரி மோலா... அழகைத் தாண்டி உலகை வென்ற கதை!
அழகு என்பது முகத்தில் மட்டும் இல்லை... அது செய்யும் செயலிலும், சமூகத்துக்காக முன்னெடுக்கும் முயற்சிகளிலும் இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹைரி மோலா.
வியட்நாமின் நஹா ட்ராங் நகரில் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற 73-வது மிஸ் வேல்ட் 2026 கிராண்ட் ஃபினாலேவில், உலகின் 110 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி ஜோஹைரி மோலா உலக அழகியாக மகுடம் சூடியுள்ளார்.
ஸ்பெயினின் எலிசபெத் ரெயினாஸ் அலபெர்ன் முதல் ரன்னர்-அப்பாகவும், மலேசியாவின் தனுசியா செட்டி இரண்டாவது ரன்னர்-அப்பாகவும் தேர்வாகினர். மேலும், தனுசியா செட்டி ‘Beauty with a Purpose’ விருதையும் வென்றார்.
யார் இந்த ஜோஹைரி மோலா?
மாடலிங் துறையைத் தாண்டி கல்வி, சமூகப் பணி, ஊடகம் எனப் பல தளங்களில் இயங்கி வருபவர் ஜோஹைரி மோலா. Business Management and Administration படித்துள்ள இவர், குழந்தைகளின் கல்விக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
அதில் முக்கியமானது அவர் தொடங்கிய ‘Voices of Tomorrow’ என்ற அமைப்பு. பின்தங்கிய மற்றும் வசதிகள் குறைந்த சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஆங்கிலக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம்.
ஆசிரியராகவும் பணியாற்றும் ஜோஹைரி, ஆங்கிலத்தில் இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைக் கற்பித்து வருகிறார். குழந்தைகளிடம் பாடங்களைத் தாண்டி விமர்சனச் சிந்தனையையும், முழுமையான வளர்ச்சியையும் உருவாக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகிறார்.
கல்விப் பணியுடன் ஊடகத்துறையிலும் தடம் பதித்துள்ளார். Univision New York-ன் ‘Ventana a Quisqueya’ நிகழ்ச்சியில் செய்தியாளராகப் பணியாற்றி, டொமினிகன் கலாசாரம், சமூகப் பிரச்னைகள் மற்றும் மக்களின் வாழ்க்கைக் கதைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார்.
மாடலிங் துறையிலும் இயங்கி வரும் அவர், ‘Goya Gives’ அமைப்பின் தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.
75 ஆண்டுகளைக் கொண்டாடிய மிஸ் வேல்ட்!
2026-ஆம் ஆண்டுக்கான போட்டி மற்றொரு முக்கியத்துவத்தையும் பெற்றிருந்தது. மிஸ் வேல்ட் போட்டி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு 73-வது மகுடச் சூட்டுப் போட்டி நடைபெற்றது.
1951-ஆம் ஆண்டு லண்டனில் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்களை ஒரே மேடையில் கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டு போட்டியிலும் பல்வேறு சவால்கள், கலாசார நிகழ்ச்சிகள் எனப் பல கட்டங்களைக் கடந்து இறுதிப்போட்டி நடைபெற்றது.

இந்தியாவின் நிகிதா போர்வால்
இந்தியாவைச் சேர்ந்த நிகிதா போர்வால், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியைச் சேர்ந்த நடிகையும் நாடகக் கலைஞரும் ஆவார். 2024-ஆம் ஆண்டு Femina Miss India World பட்டத்தை வென்ற இவர், மிஸ் வேல்ட் 2026 போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

உலக அழகிப் போட்டியின் Top 40 இறுதிப் போட்டியாளர்கள் பட்டியலிலும் நிகிதா இடம்பிடித்தார்.
நாடகத்துறையில் பெற்ற அனுபவத்தை உலக அழகிப் போட்டி மேடையிலும் வெளிப்படுத்திய நிகிதா, இந்தியாவின் கலாசாரத்தையும் கலை மரபையும் பிரதிபலிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
குறிப்பாக ‘Dances of the World’ நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சி அம்மனை மையமாகக் கொண்ட அலங்காரத்தில் இந்திய கலாசாரத்தை வெளிப்படுத்தினார்.
இறுதிப்போட்டியில் ப்ளஷ்-பிங்க் நிற கவுனில் தோன்றிய நிகிதாவின் ஆடையும் கவனம் பெற்றது.
மகுடம் மட்டுமல்ல... ஒரு பொறுப்பும்!
கடந்த ஆண்டு உலக அழகியாகத் தேர்வான தாய்லாந்தின் ஓபல் சுச்சாடா இந்த ஆண்டு ஜோஹைரி மோலாவுக்கு மகுடம் சூட்டினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


