``அதிமுக ஆட்சி முறைகேடுகள் மீதும் வழக்கு தொடரப்படும் - அமைச்சர் நிர்மல் குமார்
கே.பி மூக்கையா தேவரின் நினைவு தினமான இன்று உசிலம்பட்டியில் இருக்கும் அவரின் நினைவிடத்துக்கு அமைச்சர் நிர்மல் குமார் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மேகமலை விவகாரத்தில் முந்தைய அரசு சரியான உண்மை நிலையை நீதிமன்றத்தில் எடுத்துரைக்கவில்லை. அங்கு வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் காடுகளின் அளவு குறித்த விவரங்களைச் சரியாகச் சமர்ப்பிக்காமல் அலட்சியம் காட்டியுள்ளது.
தற்போதுள்ள அரசு, உச்ச நீதிமன்றத்தில் அனைத்து உண்மை விவரங்களையும் எடுத்துக்கூறி, மக்களுக்குத் தேவையான விலக்குகள் மற்றும் நிவாரணங்களைப் பெற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், வரும் வாரங்களில் இது தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் நல்ல செய்திகள் வெளிவரும். எங்களது அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே ஆகின்றன. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறையைப் போக்க விரிவான 58 கால்வாய் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
முந்தைய தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கிடையே நிலவிய தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளால் (ஈகோ) இத்திட்டம் முடங்கிப்போனது.
முன்னாள் அமைச்சர் மீது எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஆதாரமின்றி யார் மீதும் பொய் வழக்கு போட முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் தப்பிக்க முடியாது.
அ.தி.மு.க ஆட்சியில் மின்வாரியத்தில் (TANGEDCO) 45 டெண்டர்களில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் மக்கள் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்தும் சட்டப்பூர்வமான வழக்குகள் தொடரப்படும்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது மாநிலக் குழு மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துவது இயல்பானது. இக்கட்டான சூழல்களில் அவர்கள் இந்த அரசுக்கு ஆதரவாக நின்றுள்ளனர். சில சிறிய தவறுகளுக்கு அவர்களிடம் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதற்கேற்ற சிறப்பான பதிலையும் அறிவிப்புகளையும் நாளை முதலமைச்சர் வழங்குவார்" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

