புதுக்கோட்டை திமுக: உன் மகனின் துரோகச் செயல்- மோதிக்கொண்ட உதயம் சண்முகம், முன்னாள் அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டையில் ( செப்டம்பர்- 5) நடைபெற்ற திமுக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில், மேடையேறி மைக்கைப் பிடுங்கிப் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ.உதயம் சண்முகத்திற்கும் முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கும் இடையே காரசாரமான மோதல் வெடித்தது.
இரு தரப்பு ஆதரவாளர்களின் கூச்சல் குழப்பத்தால் கூட்ட அரங்ம் பரபரப்பானது.
3 மாவட்டங்களாகப் பிரிக்கத் திட்டம்
சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக கழகத்தைக் கட்டுக்கோப்பாக மறுசீரமைக்க கட்சித் தலைமை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளைத் தலா 2 தொகுதிகள் வீதம் 3 புதிய கட்சி மாவட்டங்களாகப் பிரிப்பது குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. திமுக தலைமையால் நியமிக்கப்பட்ட பார்வையாளரும், மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ். விஜயன் தலைமை வகித்தார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா உள்ளிட்ட மாவட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
மைக்கைப் பிடுங்கி ஆவேசம்
கூட்டத்தில் மறுசீரமைப்பு குறித்து தலைவர்கள் பேசத் தொடங்கிய நிலையில், திடீரென அரங்கத்தில் இருந்த அறந்தாங்கி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகம் ஆவேசமாக மேடைக்கு விரைந்தார். அங்கிருந்த மைக்கை அதிரடியாகப் பிடுங்கிய அவர், மேடையில் இருந்த நிர்வாகிகளை நோக்கி,
"திமுக மிக எளிதாக வெற்றி பெறக்கூடிய அறந்தாங்கி தொகுதியை, நாம் நேரடியாகப் போட்டியிடாமல் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்குத் தூக்கிக் கொடுத்தது ஏன்?" என்று மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். இதனால் கூட்டரங்கில் சட்டெனப் பதற்றம் தொற்றிக்கொண்டது.
"தவெக வெற்றிக்கு உன் மகன்தான் காரணம்!"
உதயம் சண்முகத்தின் இந்தத் திடீர் பேச்சால் அதிர்ச்சியடைந்த முன்னாள் அமைச்சரும் புத்ஜுக்கோ ரகுபதி, உடனடியாகக் குறுக்கிட்டு மிகக் கடுமையான தொனியில் பதிலடி கொடுத்தார்.

அவர் பேசுகையில், "அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் முகமது பர்வேஸுக்கு ஆதரவாக தெருத்தெருவாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது உன்னுடைய மகன்தான்.
உனது மகனின் அந்தத் துரோகச் செயல்பாட்டினால்தான் அங்கு த.வெ.க வெற்றி பெற முடிந்தது. இதை மறைத்துவிட்டு இங்கே வந்து கேள்வி கேட்கிறாயா?" எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
தலைவர்கள் சமாதானம்
இரு தலைவர்களும் நேருக்கு நேர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மோதிக்கொண்டதால், அரங்கத்திலிருந்த இருதரப்பு ஆதரவாளர்களும் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இதனால் கூட்டத்தில் பெரும் தள்ளுமுள்ளும் கூச்சல் குழப்பமும் நிலவியது.
நிலைமை கைமீறிப் போவதைக் உணர்ந்த கூட்டத் தலைவர் ஏ.கே.எஸ். விஜயன், முன்னாள் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மூத்த நிர்வாகிகள் உடனடியாகச் செயல்பட்டு, இருதரப்பினரையும் கடுமையாக எச்சரித்துச் சமாதானப்படுத்தினர்.
உள்கட்சி மறுசீரமைப்புக் கூட்டத்திலேயே முன்னாள் அமைச்சரும் முன்னாள் எம்.எல்.ஏ-வும் பகிரங்கமாக மோதிக்கொண்ட சம்பவம், புதுக்கோட்டை மாவட்ட திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

