நெல்லை: குடிநீர்க் குழாயில் தண்ணீர் வராததால் ஆத்திரம்; பஞ்சாயத்து தலைவர் அடித்துக் கொலை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட தாமரைக்குளம், தெற்குத் தெருவில் வசித்து வந்தவர், மகாராஜன் (65). அவர் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவராகச் செயல்பட்டு வந்தார்.

அவரது வீட்டின் அருகே இசக்கியப்பன் என்ற தொழிலாளி வசித்து வந்தார். அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்போது இசக்கியப்பன் வீட்டுக்கு மட்டும் குடிநீர் செல்லவில்லை.

கடந்த சில தினங்களாகவே அவரது வீட்டுக்கு மட்டும் தண்ணீர் செல்லாததால் அவர் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

கொலையான பஞ்சாயத்து தலைவர் மகாராஜன்

இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் மகாராஜன் வீட்டுக்குச் சென்ற இசக்கியப்பன், தன் வீட்டுக்கு மட்டும் ஏன் குடிநீர் வருவதில்லை எனக் கேட்டுள்ளார். அதற்கு, குழாயில் ஏதாவது அடைப்பு இருக்க்கக்கூடும். அதை விரைவாகப் பார்த்து சரிசெய்யச் சொல்கிறேன் என்று பஞ்சாயத்து தலைவர் தெரிவித்திருக்கிறார்.

அதை ஏற்க மறுத்த இசக்கியப்பன், தனது வீட்டுக்கு உடனடியாக தண்ணீர் கிடைக்கச் செய்யவேண்டும். அதுவரை அந்த இடத்தில் இருந்து செல்லமாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்ததோடு, பஞ்சாயத்து தலைவர் மகாராஜனிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரம் அடைந்த இசக்கியப்பன், அங்கு வீடு கட்டுமான பணிக்காக வைத்திருந்த செங்கலை எடுத்து மகாராஜன் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த பஞ்சாயத்து தலைவர் மகாராஜன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்குப் போராடினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பரப்பாடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், அவரை மேல் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமபைல்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீஸார், உயிரிழந்த மகாராஜன் உடலை உடற்கூறாய்வு செய்வதற்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மரித்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடிநீர்ப் பிரச்னைக்காக பஞ்சாயத்து தலைவரைக் கொலை செய்த இசக்கியப்பன் தலைமறைவானார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், கொலை நடந்த சில மணி நேரத்திலேயே கொலையாளி இசக்கியப்பனைக் கைது செய்தனர்.

"கடந்த சில தினங்களாக தனது வீட்டுக்கு மட்டும் குடிநீர் வராததால் ஆத்திரமடைந்து, பஞ்சாயத்து தலைவர் வீட்டுக்குச் சென்று வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் அங்கு கிடந்த செங்கலை எடுத்து பஞ்சாயத்து தலைவரின் தலையில் தாக்கியிருக்கிறார்" என்கிறார்கள் போலீஸார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.