போலி வங்கிக் கணக்குகளை வைத்து 15 நாளில் ரூ.9 கோடி மோசடி; கல்லூரி மாணவர்களைக் குறிவைக்கும் கும்பல்

சைபர் மோசடி கும்பல் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் மோசடி செய்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் மோசடி மூலம் பெறும் பணத்தை வங்கிக் கணக்கில் பெற அப்பாவிகளின் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர்.

அப்பாவி மக்களுக்குத் தெரியாமல் அவர்களது வங்கிக்கணக்கைப் பயன்படுத்தி மோசடி பணத்தை அந்த வங்கிக்கணக்கிற்கு வரவைத்து வேறு கணக்கிறகு உடனே மாற்றுகின்றனர்.

அது போன்ற ஒரு மோசடியில் மும்பை மாணவர்கள் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் சைபர் குற்றங்களில் ஈடுபடும் ஒரு கும்பல் இந்த வேலையைச் செய்துள்ளது. மும்பை, கல்யாண் மற்றும் நவி மும்பையைச் சேர்ந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் ஆவணங்கள் மற்றும் பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி 75 வங்கிக்கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

அந்தக் கணக்குகள் மூலம் கடந்த ஜனவரி 10 முதல் மார்ச் 5 வரை சைபர் குற்றத்தில் ஈடுபடும் கும்பல் ரூ. 50 கோடி அளவுக்கு பொதுமக்களிடம் மோசடி செய்துள்ளனர். இம்மோசடி தொடர்பாக வங்கியின் அலுவலகப் பணியாளர் ரூபேஷ் தாக்குர் (38), வங்கியின் வணிகப் பிரிவு ஊழியர் யோகேஷ் வடகர் (37), சமூக ஊடகங்களில் பிரபலமாக விளங்கும் சாஹில் ஜாவேத் கேப்டன் (22), டெலிவரி பாய் பிரசாத் ராய்கர் (26), மற்றும் சிவம் துபே (23) ஆகியோரை ஏப்ரல் 5 முதல் மே 3 வரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இம்மோசடி தொடர்பாக கடந்த மார்ச் 25ம் தேதி மும்பை சாக்கிநாக்கா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி யாஷ் பரத்கர் (20), ஆனந்த் யாதவ் (20), அபிஷேக் திவாரி (21), சக்சம் பட் (19), மற்றும் ஹர்தீப் திவாரி (21) ஆகியோரை சக மாணவர் ஹர்ஷத் வான்கடே (20) என்பவர் கேப்டனிடம் அறிமுகப்படுத்தி, பகுதி நேர வேலை தருவதாக உறுதியளித்தார்.

ஜனவரி 5ம் தேதி கேப்டன் அவர்களை மும்பை குர்லா ரயில் நிலையத்தில் சந்தித்து, புதிய சிம் கார்டுகளைப் பெற உதவினார், மேலும் அவர்களின் ஊதியத்தைப் பெற வங்கிக் கணக்குகளைத் திறக்க சாக்கிநாக்காவில் உள்ள யோகேஷ் ஏஜென்சிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவர்களை மற்ற மூன்று பேருக்கு கேப்டன் அறிமுகப்படுத்தினார். அங்கு அவர்களுக்கு பயோமெட்ரிக் பயன்படுத்தி வங்கிக்கணக்கு திறக்கப்பட்டது. ஆனால் ஒரு வாரத்திற்கும் மேலாகியும் வேலைக்கு அழைக்கவில்லை. சட்டக்கல்லூரி மாணவரான பரத்கர், சில வாரங்களுக்குப் பிறகு வேலைகளைப் பற்றி எதுவும் கேட்காததால் சந்தேகமடைந்தார்.

தங்களுடைய ஆவணங்கள் மற்றும் பயோமெட்ரிக்ஸ் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று கவலைப்பட்ட ஐந்து நண்பர்கள், ஒரு மாதத்தில் தங்கள் பெயரில் ஏதேனும் புதிய கணக்குகள் திறக்கப்பட்டு உள்ளதா என வங்கிகளில் சோதனை செய்தனர்.

இதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அவர்கள் பெயரில் திறக்கப்பட்டு இருந்த 11 கணக்குகள், டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கிரைம் புகார்களைத் தொர்ந்து முடக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், நாங்கள் ஒருபோதும் செய்யாத மோசடிக்காகக் கைது செய்யப்படலாம் என்று அச்சம் அடைந்து இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். இந்த மோசடி தொடர்பாக ஜூன் முதல் வாரத்தில் அந்தேரி நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்த 400 பக்க குற்றப்பத்திரிகையில், 75 கணக்குகள் தேசிய சைப்-ஆர்கிரைம் ரிப்போர்டிங் வெப்சைட்டில் இணைக்கப்பட்டுள்ளதாக போலீசார் அதில் குறிப்பிட்டு இருந்தனர்.

5 மாணவர்கள் பெயரில் 15 நாட்களில் 11 வங்கிக்கணக்கில் ரூ.9 கோடி பரிவர்த்தனை செய்துள்ளனர்

சைபர் கிரைம்
சைபர் கிரைம்

தாகூர், மாணவர்களுக்குத் தெரியாமல் வங்கிக்கணக்கு திறக்கப்பட்ட பிறகு வழங்கப்படும் ஏ.டி.எம்.கார்டு போன்ற விபரங்களை வாங்கிச்சென்றார். அவற்றை மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் உள்ள முகவரிகளுக்கு அனுப்பி இருந்தார். இம்மோசடியில் முக்கிய குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.