பணவரவையும் ராஜயோகத்தையும் அருளும் அதிர்ஷ்ட கிரகங்கள்... 12 ராசியினரும் அறிய வேண்டிய ஜோதிட ரகசியம்!

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன், செவ்வாய், குரு ஆகியோர் யோக பாக்கியங்களை அளிக்கக் கூடியவர்கள். இவர்கள் மூவருமே ராஜ கிரகங்கள் என்பதால் அரசயோகம் உண்டாகும். உயர் பதவி கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

மேஷ ராசியினருக்கு மேற்சொன்ன மூன்று கிரகங்கள் பலமான நிலையில் சஞ்சரிக்கும்போது, திடீர் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிறரை வேலை வாங்கும் தகுதி ஏற்படும். ஆனால், இந்த ராசிக் காரர்களுக்குப் புதன், சுக்கிரன், சனி ஆகியோரால் கெடு பலன்கள் உண்டாகும்.

இந்தக் கிரகங்களின் ஆட்சிக் காலங்களில் (தசை, புக்தி, அந்தரம்) எச்சரிக்கையாக இருப்பதுடன், குறிப்பிட்ட காலங்களில் கிரகச் சாந்தி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. பழநிக்குச் சென்று தண்டாயுதபாணியை வழிபடுவதும், ஏழைகளின் கல்விக்கு உதவுவதும் விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.

ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்குச் சூரியன், புதன், சனி ஆகியோர் யோக பலன்களைத் தரக்கூடியவர்கள். சனி முழு முதல் யோக காரகன் ஆவார். இவர் வலுத்திருந்தால், சகல யோகங்களையும் பெறமுடியும். சனியும் புதனும் இணைந்திருப்பது அதிர்ஷ்ட வாய்ப்புக்களைத் தரும்.

சூரியன் 4 எனும் கேந்திரத்துக்கு மட்டும் அதிபதி என்பதால், இவர் லக்னாதிபதிக்கு பகை கிரகம் என்றாலும் சொத்து, சுகங்களை வழங்குவார். இந்த ராசிக்காரர்களுக்கு சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியோரால் கெடு பலன்கள் ஏற்படும். குறிப்பிட்ட கிரகங்களின் ஆட்சிக் காலங்களில் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது அவசியமாகும். சிவ வழிபாடு நன்மை அளிக்கும்.

மிதுனம்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு புதன், சுக்கிரன் ஆகியோரால் யோக பலன்கள் கிடைக்கும். இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது சிறப்பு. ஞாயிற்றுக் கிழமைகளில் அம்பாளை வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும். மேலும், சூரியன், செவ்வாய், குரு ஆகியோரால் கெடுபலன்கள் உண்டாகும். குறிப்பிட்ட கிரகங்களின் ஆட்சிக் காலங்களில் கிரகச் சாந்தி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.

கடகம்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், குரு, சந்திரன் ஆகியோரால் யோக பலன்கள் சித்திக்கும். இவர்களில் செவ்வாய் வலுத்திருந்தால் விசேஷ பலன்கள் நிச்சயம். சுப வீடுகளில் இந்த மூவரின் இணைவு மற்றும் பார்வை மூலம் நலம் பெருகும்.

புதன், சுக்கிரன், சனி ஆகியோரால் கடக ராசிக்காரர்களுக்குக் கெடு பலன்கள் ஏற்படலாம். குறிப்பிட்ட இந்தக் கிரகங்களின் தசை, புக்தி, அந்தர காலங்களில், குறிப்பிட்ட கிரகங்களுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்துகொள்வது அவசியம். மகாலட்சுமி மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவதால், கெடு பலன்கள் குறையும்.

ராசிகள்

சிம்மம்: இவர்களுக்கு செவ்வாய் யோக காரகர்; யோக பலன்களை அளிப்பவர். சூரியன், குரு ஆகியோரது தொடர்பு செவ்வாய்க்கு இருக்கும் பட்சத்தில் சுப பலன்கள் அதிகரிக்கும். ராஜயோகம் உண்டாகும். சிம்மம் சூரியனின் வீடாவதாலும் சூரியன், செவ்வாய், குரு ஆகியோர் ராஜ கிரகங்கள் என்பதாலும் உயர் அதிகாரப் பதவிகள் இவர்களுக்கு இயற்கை யாகவே அமையும்.

இவர்களுக்கு புதன், சுக்கிரன், சனி ஆகியோர் சங்கடங்களையும் தரக்கூடும் என்பதால் குறிப்பிட்ட தசை, புக்தி, அந்தர காலங்களில் விழிப்பு தேவை. சனிக்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று நவகிரகங்களில் சனி பகவானுக்கு எள் தீபமேற்றி வழிபட்டு வரலாம்.

கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு புதன், சுக்கிரன் ஆகியோரது ஆட்சிக் காலங்கள் யோக பாக்கியங்களை அள்ளித்தரும். பெளர்ணமி தினங்களில் வீட்டில் நெய் விளக்கேற்றி வைத்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து அம்பாளை வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும். சந்திரன், செவ்வாய், குரு ஆகியோரது தசை, புக்திக் காலங்களில் எச்சரிக்கை தேவை.

துலாம்: இந்த ராசிக்காரர்களுக்குச் சனி முதல்தர யோக காரகன் ஆவார். இவர் வலுத்து, இவரது தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறும்போது யோக பாக்கியங்களை ஜாதகர் பெறமுடியும். அதேநேரம், சூரியன், செவ்வாய், குரு ஆகியோரது ஆட்சிக் காலங்களில் சோதனைகளும் சங்கடங்களும் உண்டாகும்.

குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட கிரகத்துக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது அவசியமாகும். இந்த ராசிக்காரர்கள், நரசிம்ம ஸ்வாமியை வழிபடுவது சிறப்பு. இயன்றால் பரிக்கல், திருவரங்கம் அழகியசிங்கர் சந்நிதிக்குச் சென்று வழிபட்டு வரலாம்.

விருச்சிகம்: இந்த ராசியினருக்குச் சூரியனும் சந்திரனும் யோக கிரகங்கள். இவர்களது சேர்க்கை சுப வீடுகளில் அமைந்தால், யோக பாக்கியங்கள் அதிகமாகும். இவர்களுடன் குரு சேர்ந்தாலோ, பார்த்தாலோ சுப பலன்கள் மேலும் அதிகரிக்கும். உயர் அதிகாரப் பதவி கிடைக்கும்.

இவர்களுக்கு புதன், சுக்கிரன், சனி ஆகியோரது தசை, புக்திகளில் சங்கடங்கள் ஏற்படும். இந்தக் கிரகங்களுக்கு பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வதன் மூலம் சங்கடங்களைக் குறைத்துக் கொள்ளலாம். இவர்கள், ஒருமுறை காஞ்சி காமாக்ஷியம்மன் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு வரம் பெற்று வரலாம். வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதிப் பாடல்களைப் பாடி வழிபடலாம்.

நவகிரகங்கள்
நவகிரகங்கள்

தனுசு: சூரியன், செவ்வாய், புதன், குரு ஆகியோரால் யோக பலன்கள் உண்டாகும். சூரியன் புதன் இணைவும், செவ்வாய் குரு சேர்க்கையும், சூரியன் செவ்வாய் தொடர்பும் விசேஷமானவை. ராஜயோக பலன்களை அள்ளித்தரும்.

இந்த ராசியினர், கோயில் அன்னதானத்துக்கு உதவி செய்யலாம். இயன்றால், குடந்தை சார்ங்கபாணி கோயிலுக்குச் சென்று வழிபட்டு வரலாம். சுக்கிரனும் சனியும் கெடுபலன்களை உண்டு பண்ணுவார்கள்.

மகரம்: சுக்கிரன் முதல்தர யோக காரகன் ஆவார். புதன் சுக்கிரன் சேர்க்கை சுப வீடுகளில் அமையும்போது யோக பாக்கியங்கள் பெருகும். சந்திரன், செவ்வாய், குரு ஆகியோரது ஆட்சிக் காலங்களில் எச்சரிக்கை தேவை.

இந்த ராசியினர் திருவரங்கம் சென்று திருவரங்கநாதரை வழிபட்டு வந்தால், நற்பலன்கள் கைகூடும். வீட்டில் சஷ்டிக் கவசம் படித்து முருகப்பெருமானை வழிபட்டு வளம் பெறலாம்.

கும்பம்: இந்த ராசிக்குச் சுக்கிரன் யோக காரக கிரகம் ஆவார். செவ்வாயும் ஓரளவு பலன்களை தரக்கூடியவர். செவ்வாயும் சுக்கிரனும் சுப ஸ்தானங்களில் இணைவது விசேஷமாகும். இவர்களுக்குச் சந்திரன், செவ்வாய், குரு ஆகியோரால் பிரச்னைகள் எழ வாய்ப்பு உண்டு.

குறிப்பிட்ட கிரகங்களின் தசை, புக்தி, அந்தர காலங்களில் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது அவசியமாகும். சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வரலாம். வீட்டில் அனுதினமும் கோளறு பதிகம், விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து வழிபடலாம்.

மீனம்: செவ்வாய், சந்திரன், குரு ஆகியோரால் யோக பலன்கள் உண்டாகும். செவ்வாய் குரு இணைவும், செவ்வாய் சந்திரன் இணைவும் விசேஷமான ராஜயோகத்தைத் தரும். சூரியன், புதன், சுக்கிரன், சனி ஆகியோரது தசை, புக்திகள் சோதனையானவை. திருமால் வழிபாடு நன்மை அளிக்கும். ஒருமுறை திருமாலிருஞ்சோலை அழகரை தரிசித்து அருள் பெற்று வரலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.