`Rapido நிறுவனத்தால் மட்டுமே 2.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு; எனவே, மாநில அரசுகள்..! - நிதின் கட்கரி

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மைப் பிரச்னை குறித்தும், 22 லட்சம் வேலைவாய்ப்புகள் குறித்தும் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளதாவது...

“நமது நாட்டில் கிட்டத்தட்ட 22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே, இதில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதே உண்மை நிலை.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு ஃபைலில் எடுத்த சிறிய முடிவைச் சொல்கிறேன்.

இருசக்கர வாகனம் அல்லது கார் வைத்திருக்கும் யாரும் தங்களின் வாகனத்தை வாடகை டாக்ஸியாக இயக்கலாம் என்று அப்போது கையெழுத்திட்டேன்.

Rapido, Ola பைக் டாக்ஸி

அப்படித் தொடங்கப்பட்ட திட்டத்தின் மூலம், தற்போது கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 4 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனெனில், இந்தியச் சூழலில் வேலையின்மை என்பது ஒரு மிகப்பெரிய பிரச்னை.

பெங்களூரைச் சேர்ந்த ஐ.ஐ.டி இன்ஜினீயர்கள் சிலர் இணைந்து ‘ராபிடோ’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். அவர்களின் ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன்.

அந்த நிறுவனம் மட்டுமே சுமார் 2 கோடியே 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறார்கள்.

இப்போது அந்த இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்பு கிடைப்பதோடு, தங்களின் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை டாக்ஸியாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

கிராமப்புறங்களில் போக்குவரத்து என்பது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. எனவே, அனைத்து மாநில அரசுகளுக்கும் நான் ஒரு கோரிக்கை வைக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கினால், குறைந்தபட்சம் 8 கோடி மக்களுக்கு நம்மால் வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.

போக்குவரத்து என்பது மத்திய-மாநில அரசுகளின் கூட்டாட்சிப் பட்டியலில் உள்ள ஒரு துறையாக இருப்பதால், பல மாநில அரசுகள் இந்தக் கொள்கையை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே, அனைத்து முதலமைச்சர்களுக்கும் நான் கோரிக்கை விடுக்கிறேன் - கிராமப்புற மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் வேலையின்மை ஒரு கடுமையான பிரச்னையாக உள்ளது.

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

ஒரு தனிநபர் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்துவது மிகவும் சிக்கனமான ஒன்றாகும். இப்போது ராபிடோ முறையை எடுத்துக்கொண்டால், அவர்கள் மாதத்திற்கு வெறும் 25 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறார்கள்.

அதாவது ஆண்டுக்கு 300 ரூபாய் மட்டுமே. மீதி வருவாய் அந்த டிரைவருக்கே கிடைப்பதால், அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

அதே நேரத்தில் ஊபர் போன்ற பிற டாக்ஸி நிறுவனங்களின் தொழில்முறை சற்று வேறுபட்டதாக உள்ளது.

அதே சமயம், பெருமளவிலான டிரைவர்களுக்குச் சரியான டிரைவர் பயிற்சி அளிக்க வேண்டியதும் மிக முக்கியம். குறிப்பாகப் பெரிய கனரக வாகனங்கள் மற்றும் கட்டுமான இயந்திரங்களை இயக்குவதற்குப் போதுமான பயிற்சி வசதிகள் இல்லை.

எனவே, ஜே.சி.பி போன்ற தயாரிப்பு நிறுவனங்களிடம் நான் ஏற்கனவே ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். உங்கள் இயந்திரங்களை விற்பனை செய்வதற்கு முன்பாக, அவற்றை இயக்கும் ஓட்டுநர்களுக்கு முறையான பயிற்சித் திட்டங்களை நீங்கள் வழங்க வேண்டும். அது மிகவும் அவசியமான ஒன்றாகும்.”

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.